Skip to main content

வெளிநாட்டில் வேலைபார்க்கும் தந்தை... வீடியோ கால் பேசிய மகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி... வெளிவந்த தகவல்! 

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

girl

 

துபாயில் வேலை பார்த்துவரும் தந்தையிடம் மகள் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது செல்போன் வெடித்து கண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் முத்தையா கொத்தனார் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார். எட்டு ஆண்டுகளுக்கு மேலாகத் துபாயில் கூலி வேலை பார்த்துவருகிறார். அவருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவளான ஆர்த்தி பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டிலே இருந்துவருகிறார். வெளி நாட்டிலிருக்கும் தனது தந்தையிடம் இரண்டு நாளுக்கு ஒருமுறை பேசிக்கொண்டிருப்பது ஆர்த்தியின் வழக்கம். கரோனா ஊரடங்குக்குப் பின் தினசரி காலையில் நலம் விசாரித்து வந்திருக்கிறார்.


கடந்த ஏப்ரல் 27- ஆம் தேதி காலையும் வழக்கம்போல தந்தையிடம் செல்போனில் சார்ஜ் போட்டவாறே வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்ததில் ஆர்த்தியின் காதில் காயம் ஏற்பட்டதோடு, வெடித்த செல்போனின் துகள்கள் ஆர்த்தியின் இரண்டு கண்களிலும் பட துடிதுடித்துக் கதறினார்.

ஆர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு சுற்றியிருந்த குடியிருப்புகளிலுள்ள மக்கள் ஓடிவந்து அவரை நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவிக்குப்பின், தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் சிகிச்சைக்குப்பின் அன்று இரவே வீட்டுக்குத் திரும்பினார். வீட்டுக்கு வந்த ஆர்த்திக்கு மீண்டும் நள்ளிரவில் கண்வலி அதிகரிக்கவே வேறு வழியில்லாமல் ஆம்புலன்ஸ் மூலமாகத் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் உறவினர்.

 

 


இதுகுறித்து ஆர்த்தியின் உறவினர் ஒருவரிடம் விசாரித்தோம், "சமீபத்தில் அரேபிய, வளைகுடா நாடுகளில் வேலையிழப்பு குறித்த பேச்சுகள் அடிபட்டுவருவதால் வீடியோ காலில் தந்தையிடம் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார் ஆர்த்தி. ஏப்ரல் 26 அன்று இரவு முழுவதும் மின்வெட்டு. செல்போன் சார்ஜ் இல்லாமல் இருந்ததால் மறுநாள் ஒன்பது மணிக்கு கரண்ட் வந்ததும் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்த ஆர்த்தி, அப்படியே சார்ஜ் போட்டபடியே தனது தந்தையிடம் பேசத்தொடங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக செல்போன் வெடித்து ஆர்த்தியின் முகத்தைச் சிதைத்து விட்டது...'' என்கிறார் வேதனையுடன்.

மிகக் குறுகிய காலத்தில் செல்போன் இளைய தலைமுறையின் மீது செலுத்திவரும் அதீத தாக்கம் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இந்த ஊரடங்கு நேரத்தில் பலதுறைகளைச் சேர்ந்தவர்களும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய இணைய வசதியுடனான செல்போனே பயன்படுகிறது. ஜூம் மீட்டிங்குகள், ஆபிஸில் அனைவரும் கூடிப்பேசும் வசதியை நிவர்த்தி செய்கிறது. செல்போன் வழங்கும் வசதிகளை அத்தனை எளிதாய்ப் பட்டியலிட்டுவிட முடியாது. அதேசமயம் செல்போனுக்கு சார்ஜ் போட்டுக்கொண்டே பேசக்கூடாது என்பது எளிய பாதுகாப்பு விதி.
 

http://onelink.to/nknapp



இரவெல்லாம் மின்வெட்டு செய்யப்பட்டிருந்ததும், பகலில் மின்சாரம் வந்ததும், வோல்டேஜ் ஏற்ற இறக்கமும் தந்தையுடன் பேசும் ஆர்வமும் ஒரு பெண்ணின் கண்களுக்கு ஆபத்தாக முடிந்திருக்கிறது. நமக்கென்ன ஆகப்போகிறது… என சார்ஜ் போட்டபடியே பேசுபவர்களே, கண்கள் மட்டுமல்ல உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தலாம்... உஷார்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

சரமாரியாகத் தாக்கிய மகன்; கடைசி வரைக்கும் காட்டிக்கொடுக்காத தந்தை - அதிரவைக்கும் சம்பவம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
The son beaten his father in a property dispute

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் உள்ள, தலைவாசல் வடகுமரை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது அமிர்தா சேகோ எனும் தொழிற்சாலை. இதன் உரிமையாளர் குழந்தைவேலு. இவரின் மனைவி ஹேமா. இந்தத் தம்பதிக்கு சக்திவேல் என்ற மகனும், மகளும் இருக்கின்றனர். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இருவரும் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். குழந்தை வேலுவின் மகன் சக்திவேல் பி.டெக், எம்.பி.ஏ படித்துவிட்டு, தந்தையின் தொழிற்சாலைகளைக் கவனித்து வந்துள்ளார்.

கடந்த ஐந்து வருடமாக சக்திவேல் அமிர்தா சேகோ தொழிற்சாலையை நிர்வகித்து வந்துள்ளார். இந்தநிலையில், சக்திவேல் தொழிலில் கடந்த சில மாதங்களாக பெரும் பின்னடவை சந்தித்துள்ளார். இதனால் வெளியே கடன் வாங்கி தொழிலை நடத்தியுள்ளார். இதனால் அதிக கடனுக்கு ஆளாகியுள்ளார். ஒருகட்டத்தில், மகன் கடன்வாங்கி தொழில் நட்த்திவருவது, தந்தை குழந்தைவேலுக்கு தெரியவரவே இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

ஏகப்பட்ட கடனில் சிக்கியதற்கு மகனின் பொறுப்பற்ற நிர்வாகத் திறனே காரணம் என முடிவுக்கு வந்த தந்தை, அவரது நிர்வாகத்தில் எவ்வித தலையீடும் செய்யவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால், தொழிற்சாலை ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதில்கூட சிரமத்தைச் சந்தித்துள்ளார் மகன் சக்திவேல். இதனால் தந்தைக்கு பெரம்பலூரில் உள்ள ரைஸ் மில்லின் பணத்தை எடுத்து பயன்படுத்த விரும்பியுள்ளார். ஆனால், பெரம்பலூர் தொழிற்சாலையில் குழந்தைவேலுவுக்கு 50 சதவிகித பங்கும், குழந்தை வேலுவின் மாமனார் குடும்பத்திற்கு கணிசமான பங்கும் இருந்துள்ளது. குழந்தைவேலுதான் முழுமையாக அதனைப் பார்த்து வந்துள்ளார். பணம் இருந்தும் தந்தை, தனது கடன் பிரச்சனைக்கு உதவவில்லை எனக் குழந்தைவேலு மீது மகன் சக்திவேல் ஆத்திரத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள திண்ணையில் குழந்தைவேலு உட்கார்ந்திருந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, சக்திவேல் அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். பின்னர், குழந்தைவேலுவைத் தனது இரண்டு கைகளால் மாறி மாறி சக்திவேல் தாக்கி உள்ளார். இதைக்கண்ட குழந்தைவேலுவின் மனைவி ஹேமா மற்றும் வேலையாட்கள் சக்திவேலினை வந்து பிடித்து தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத சக்திவேல், தனது தந்தையை முகத்தில் தாக்கி உள்ளார். இதில் நிலைகுலைந்துபோன குழந்தைவேலு உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எஸ்.ஐ பழனிசாமி விசாரணை நடத்தியுள்ளார். மறுபுறம், சிகிச்சை முடிந்து வெளியேவந்த குழந்தைவேலு தனக்கும், தன் மகனுக்கும் உள்ள பிரச்னையைத் தாங்களே பேசி முடித்துக் கொள்வதாக எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய இரண்டு நாட்களில் குழந்தைவேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தைவேலுவை பிப்ரவரி 16 அன்று சக்திவேல் தாக்கியது, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதன் மூலம் கைகளத்தூர் போலீஸார் சக்திவேலினை கைதுசெய்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடைசிவரை மகனைக் காட்டிக் கொடுக்காமல் இருந்த தந்தை அவமானம் தாங்காமல் மருந்து குடித்து உயிரை மாய்த்துக்கொன்டாலும், தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு உண்மை வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.