Skip to main content

இளம்பெண் காயங்களுடன் சாலையோரத்தில் அழுத சம்பவம்!!! விசாரணையில் சிக்கும் முக்கிய பிரபலங்கள்? நடந்தது என்ன...

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

incident



தமிழகத்தில், வடமாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்களை வீட்டு வேலைக்கென அழைத்துவந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்தில் சப்-இன்ஸ் பெக்டர் உள்ளிட்ட ஐந்து பேர் கைதாகியிருப்பது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

கடந்த ஜூன் 1-ஆம் தேதி மதியவேளை, தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டிக்கும், சானூராப்பட்டிக்கும் இடையில் இருபதுவயது மதிக்கத்தக்க வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுட்டெரிக்கும் வெயிலில் உடல்முழுவதும் பலத்த காயங்களுடன் சாலையோரத்தில் நடக்கமுடியாமல் அழுதுபுரண்டபடிக் கிடந்தார். அதே நாளில் அப்பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். கொளுத்தும் வெயிலில் இளம்பெண் ஒருவர் எழுந்து நடக்கமுடியாமல் தவித்ததைக் கண்ட மாதர்சங்க பெண்கள் பதறித்துடித்து அந்தப் பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

incident



மருத்துவமனைக்குச் சென்ற அந்த இளம்பெண்ணோ யாரைக் கண்டாலும் பயத்தில் நடுங்கி கூனிக்குறுகினார். மாதர் சங்கத்தினர் உன் பாதுகாப்புக்கு நாங்கள் இருக்கிறோம். கவலை வேண்டாம் என சைகையில் ஆறுதல் கூறினர். அந்த இளம்பெண் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் பேசும் மொழியும் முதலில் புரியவில்லை, என்றாலும் அவர் இருக்கும் நிலைமையை யூகித்து அவர் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்பதையும் உணர்ந்து, அந்த இளம்பெண் விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென தஞ்சை மாவட்ட எஸ்.பி. மகேஷ்வரனிடம் புகார் அளித்தனர்.

இதுகுறித்து மாதர் சங்கத்தினர் நம்மிடம், "21 வயதான அந்தோரா என்கிற இளம்பெண் மேற்கு வங்க மாநிலம், துர்காபூரில் பிறந்து பிழைப்புத் தேடி சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு குடும்பத்துடன் வந்து பெற்றோருடன் வசித்து வந்திருக்கிறார். பெங்க ளூரில் உள்ள அவரது சித்தி மகள் சாந்தா என்பவர் மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவன் நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்கு எனக்கூறி முன்பணம் கொடுத்து அந்தோராவை அழைத்து வந்திருக்கிறான்.

அந்த வீட்டில் ஏற்கனவே சில இளம்பெண்கள் இருப்பதும், அவர்கள் பாலியல் தொழிலில் சிக்கிக் கொண்டிருப்பதையும் சிலநாட்களில் தெரிந்துகொண்டார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணுக்கு முடியாமல், உதிரப்போக்கால் துடிதுடித்து தன்னை பெற்றோர்களிடம் திருப்பி அனுப்பி வைக்குமாறு போராடியிருக்கிறார், அதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் அந்தப் பெண்ணை கொடூரமாக அடித்து, இனிமேல் இந்த பெண்ணால் பயனில்லையென முடிவெடுத்து, யாராவது பார்த்தாலும் வடமாநிலத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவரென நினைத்துக்கொள்வார்கள் என்று திட்டமிட்டு வெட்ட வெளியில் காரிலிருந்து உதைத்து தள்ளிவிட்டுச் சென்றிருக்கின்றனர் என்கிறார்கள்.

 

incident



இந்த விவகாரம் குறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடராஜபுரம் காலனியில் உள்ள ஒரு வீட்டில் தலைமறைவாக பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான செந்தில்குமார், அவரது மனைவி ராஜம், பிரபாகர், ராமச்சந்திரன், புதுக்கோட்டை பழனிவேல் ஆகிய 5 பேரையும் போலீசார் கைதுசெய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.

கைதாகியுள்ள பிரபாகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வல்லம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்தவர். லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். அதோடு விபசாரத்திற்குப் பயன்படுத்திய தஞ்சை மேலவஸ் தாசாவடியிலுள்ள ஒரு பங்களா, நடராஜபுரம் காலனியில் ஒரு சொகுசு வீடு, மருத்துவக்கல்லூரி சாலையில் ஒரு பங்களா என மூன்று வீட்டிற்கு சீல்வைத்துள்ளனர். மேலும் நான்கு சொகுசு கார்கள், பல லட்சம் பணம், ஒரு டைரி ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர். அந்த டைரியில் அரசியல் பெரும்புள்ளிகள், காக்கிகள், அதிகாரிகள் என பலரது தொடர்பு எண்களும் வாடிக்கையாளர்கள் வரிசையில் இருப்பதாக விசாரணை காக்கிகள் கிசுகிசுக்கின்றனர்.

என்ன நடந்தது என விசாரணை மேற்கொண்டுவரும் காவல் துறையினரிடம் கேட்டோம், ""தஞ்சை மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த செந்தில்குமார்தான் இந்த கும்பலின் தலைவன். வட மாநிலங்களில் வறுமையில் வாடும் குடும்பத்தில் உள்ள இளம் பெண்களை குறிவைத்து வீட்டு வேலைக்கு என புரோக்கர்கள் மூலம் பேசி அதிக பணம்கொடுத்து அழைத்துவந்துவிடுவான். இதற்காகவே பல மாநிலங்களில் ஏஜெண்டுகளை வைத்திருக்கிறான். இங்கு வந்ததும் செந்தில்குமாரின் மனைவி ராஜம் அந்த பெண்களிடம் ஆசையான வார்த்தைகளையும், அலங்காரமான ஆபரணங்களையும் மாட்டிவிட்டு, இவ்வளவு பெரிய வீட்டில் நீ வேலைக்காரப் பொண்ணு இல்ல, இங்க நீதான் ராணி என ஆசையாக கூறி நைசாக பேசி நாகரிக உடைகளை உடுத்தி விதவிதமாக போட்டோ எடுப்பார்கள்.

அந்த போட்டோக்களை தங்களிடம் கஸ்டமர்களாக இருக்கும் அனைவருக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பிவைப்பார்கள், பின்னர் கஸ்டமர் தேர்வுசெய்யும் பெண்ணை நைசாக பேசி விபசாரத்திற்கு உட்படுத்துவார்கள், ஒப்புக்கொள்ளாத பெண்களை போட்டோக்களை வலைத் தளத்தில் பதிவிட்டுவிடுவோம் என மிரட்டுவார்கள். வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் பெண்களை கஸ்டமர்கள் வீட்டிற்கே காரில் அனுப்பி வைப்பார்கள். சில கஸ்டமர்களை செந்தில்குமாருக்கு சொந்தமான சொகுசு வீடுகளில் ஏதாவது ஒன்றுக்கு வரவழைத்து அந்த பெண்களை அனுப்புவார்கள். இதுபோக கஸ்டமருடைய காரிலேயோ, அல்லது செந்தில்குமாரிடம் ஆடம்பர பெட் வசதிகளுடன் கூடிய இரண்டு சொகுசு காரிலோ ஆன்லைன் விபச்சாரத்தொழிலை செய்துள்ளனர்.

தஞ்சையில் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக போலீஸ் குடியிருப்புக்கு பக்கத்திலேயே இது நடந்திருப்பதுதான் வேதனை. சாதாரண துணிக்கடை வைத்திருந்த செந்தில்குமார் பாலியல் தொழிலால் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறான். இந்த செந்தில்குமாரின் முதல் மனைவி காவல்துறை ஆய்வாளர், இவனது செயல்களைப் பார்த்து விவாகரத்து செய்துவிட்டார். அதற்கு பிறகுதான் ராஜம் சேர்ந்திருக்கிறார்.

இவர்கள் செய்யும் விபச்சாரத் தொழிலுக்கு காவல்துறை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும், எஸ்.ஐ.யாக இருந்து சஸ்பெண்டாகியிருக்கும் பிரபாகரன் பார்த்திருக்கிறார். பிரபாகரன் வல்லம் காவல்நிலையத்தில் பணியில் இருக்கும்போதே அவர்களோடு பார்ட்னர் ஆகிவிட்டார். அதேபோலதான் புதுக்கோட்டை அருகேயுள்ள கள்ளுக் குடியை சேர்ந்த பழனிவேலும், கஸ்டமர் பிடித்துக்கொடுக்கும் வேலைகளைச் செய்துள்ளான்.

இவனைப் போல தமிழகம் முழுவதும் அவர்களுக்கு நெட்வொர்க் இருக்கு. சோதனையின்போது செந்தில்குமாரின் மனைவி ராஜம் பயன்படுத்திய ஒரு டைரி, நான்கு செல்போன்களை நடராஜபுரம் வீட்டிலிருந்து கைப்பற்றினோம். அந்த டைரியில் கஸ்டமர்களாக போலீஸ்காரர்கள், வி.ஐ.பி.கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என முக்கிய புள்ளிகள் பலருடைய பெயர்கள் போன் நம்பருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

அந்த டைரியில், தமிழகம், வட மாநிலங்களிலிருந்து வந்திருந்த பெண்களின் விபரம், அவர்கள் தங்கியிருந்த நாட்கள், இடங்கள் அவர்களுக்கு கொடுத்த பணம், அவர்களோடு தங்கிய கஸ்டமர்கள் என எல்லா விவரங்களும் எழுதப்பட்டிருந்தது. அதன்படி கஸ்டமர்கள் யார் யாரெல்லாம் செந்தில்குமாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்ற விசாரணை முடுக்கிவிடப் பட்டுள்ளது. இதனால் கஸ்டமர்களாக இருந்த பல அரசியல் பிரமுகர்களும், வி.ஐ.பி.க்களும் மனப்புழுக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.

செந்தில்குமார் ஆன்லைன் மூலம்தான் இந்த தொழிலை செய்திருக்கிறான். இதற்காக தனியாகத் துவங்கியுள்ள வெப்சைட்டில் பெண்களின் படங்களை பதிவிட பெண்களை தேர்வுசெய்யும் கஸ்டமர் அவரது அக்கவுண்டுக்கு பணம் அனுப்ப வேண்டும். பணம் அனுப்பிய பிறகே பெண்ணை அனுப்பிவைப்பான். இதுதவிர தனது நம்பிக்கைக்குரிய கஸ்டமர்களின் வாட்ஸ்அப்க்கு பெண்களின் படங்களை அனுப்பிவைப்பான். கஸ்டமர்களின் ரகசியம் காக்கப்பட்டு தொழில் அமோகமாக நடந்திருக்கிறது என்கின்றனர் விவரமாக.

"குடும்ப கஷ்டத்தை போக்க வீட்டு வேலைக்கு வந்தேன். என்னை வீட்டு வேலைக்குன்னு அழைத்துவந்தவர் பணத்துக்காக இதுபோன்ற இடத்துல சேர்த்துவிட்டுட்டார். என்னோட தமிழ் தெரிந்த மூன்று பெண்களும் அந்த வீட்டில் இருந்தனர், அவங்களோட நிலைமையும் என்னோட நிலைமை போலத்தான், அவர்களையும் எப்படியாவது மீட்டுடுங்க'' என கைகூப்பி கேட்டார் என அந்த வடமாநிலப் பெண் கூறியதாக, மாதர் சங்க தலைவி தமிழ்ச்செல்வி கூறுகிறார். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தால்தான் முறையாக இருக்குமெனவும் தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.

மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரனோ, "வழக்குப் பதிவுசெய்து ஐந்து பேரை கைதுசெய்துள்ளோம், விசாரணை நடக்கிறது, அந்தப் பெண்ணுக்கு உரிய நியாயம் கிடைக்கும்.’ அதோடு அந்த கும்பலின் நெட்வொர்க் பெருசா இருக்கு விரைவில் அனைவரையும் கைதுசெய்வோம்'' என்கிறார் ஆர்வமாக.
 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.