காரைக்காலிருந்து கடத்தி வரப்பட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட காரையும் பிடித்து பறிமுதல் செய்துள்ளனர் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர்.
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள பேரளம் - காரைக்கால் சாலையில் பண்டாரவாடை என்ற இடத்தில் TN 50 P6498 பதிவு எண் கொண்ட கார் ஒன்று சாலையோர மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி நிற்பதாக பேரளம் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். உடனே விரைந்து சென்ற காவல்துறையினர் காரின் உள்ளே காயங்களுடன் யாரேனும் உள்ளனரா என கதவை திறந்து பார்த்தபோது உள்ளே மதுபாட்டிகள் கொண்ட பெட்டிகள் மட்டுமே இருந்தது. மொத்தம் 35 பெட்டிகளில் 1680 மதுபாட்டில்கள் இருந்ததும் அவை புதுச்சோி மாநிலம் காரைக்காலிருந்து கடத்தி வரபட்டதும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து மது பாட்டில்களுடன் காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 1 லட்சம் ரூபாய் இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபாட்டில்களை கடத்தி வரும் போது கார் கட்டுபாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டவுடன் காரையும் மதுபாட்டில்களையும் அப்படியே விட்டு விட்டு தப்பியோடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து பேரளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர்.
கடலிலேக்கூட தண்ணீர் வற்றிப்போகலாம் ஆனால் காரைக்கால் சரக்கு தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி மாவட்டங்களுக்கு கடத்துவதும், விற்பனை நடப்பது நின்றுபோகாது என்கிறார் போலீசார் ஒருவர்.