Published on 08/07/2018 | Edited on 08/07/2018
![NEET-Exam](http://image.nakkheeran.in/cdn/farfuture/fiftnguA-rCtVjMP3nhUckVbxwAmN2jDov-e2YH0Xus/1533347630/sites/default/files/inline-images/NEET-Exam.jpg)
நீட் தேர்வை ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மத்திய அரசு ஆண்டிற்கு 2 முறை நீட் தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசிற்கு இன்னும் முறையாக கடிதம் அனுப்பவில்லை. அப்படி கடிதம் வந்தால் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வை நடத்த வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நாட்களில் ஒரு மணிநேரம், விடுமுறை நாட்களில் 3 மணிநேரம் நீட் பயிற்சி அளிக்கப்படும். தமிழகத்தில் 100 உயர்நிலைப்பள்ளிகள், 100 மேல்நிலைப்பள்ளிகள் உருவாக்குவது குறித்து நாளை அறிவிக்கப்படும். அனைவருக்கும் வேலை என்ற உத்தரவாதத்துடன் 12ம் வகுப்பில் திறன்பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 20,000 மாணவர்களுக்கு 500 ஆடிட்டர்களை வைத்து கணக்கு தணிக்கை (சி.ஏ.) படிப்பு தொடர்பான பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான முதல் கட்டமாக ஈரோட்டில் சுமார் 2,700 மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.