
குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் திறக்கப்படும் நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் பாசனத்திற்காக நீர் திறந்து வைத்துள்ளார்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக கருதப்படும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்காக சேலம் மேட்டூர் அணையில் இருந்து 92 ஆவது ஆண்டாக இன்று பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் நான்காவது முறையாக மேட்டூர் அணைக்கு வருகை தந்து பாசனத்திற்கு நீர் திறந்து வைத்துள்ளார். எட்டு கண் மதகு வழியாக முதற்கட்டமாக மூவாயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு படிப்படியாக இன்று இரவுக்குள் நீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட இருக்கிறது.

இன்று திறக்கப்படும் தண்ணீரானது மூன்று நாட்களுக்குள் கல்லணையைச் சென்றடையும். பத்து நாட்களுக்குள் கடைமடை பகுதி வரை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.