
திருச்சி சமயபுரம் டோல்கேட் ஒய் ரோட்டில் பரணிதரன் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் தெற்கு தெரு மெலகொண்டையம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பரணிதரன். சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இன்று திருச்சி சம்யபுரம் டோல்கேட் ஒய் ரோட்டில் பரணிதரன் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பரணிதரனை வெட்டிக் கொலை செய்தது ஆட்டோ சக்தி தலைமையிலான கும்பல் என்று தெரியவந்துள்ளது. மேலும் ஆட்டோ சக்தியின் மனைவியுடன் பரணிதரனுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ சதீஷ் நண்பர்களுடன் சேர்ந்த பரணிதரனை வெட்டிப் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தப்பி ஓடிய ஆட்டோ சதீஷ் மற்றும் கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.