Skip to main content

சார் ஆட்சியருக்கு கரோனா! அலுவலகம் மூடல்!  

Published on 27/07/2020 | Edited on 27/07/2020

 

 

கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 2,412 ஆக உள்ளது. இந்நிலையில் நேற்று 1,990 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாகின. இதில் விருத்தாசலம் சார் ஆட்சியர், கடலூரைச் சேர்ந்த ஒரு மருத்துவர், மூன்று செவிலியர்கள், ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர், இரண்டு மருத்துவமனை ஊழியர்கள், நல்லூர் புவனகிரியைச் சேர்ந்த இரண்டு காவலர்கள், கடலூரைச் சேர்ந்த அலுவலக ஊழியர்  உட்பட 166 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

 

இதனிடைய கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடந்த 21-ஆம் தேதி கரோனா உறுதியான நிலையில், 50 வயதுடைய அந்த மருத்துவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று  உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர் .

 

இதேபோல்  மங்களூர் அருகிலுள்ள புடையூரை சேர்ந்த 63 வயது ஆண் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது. அதேசமயம் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,587 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

 

கடலூர் மாவட்டத்தில் 43,700 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 39, 293 பேருக்கு தோற்று இல்லை என்றும், 1,995 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகாமல் உள்ளதாகவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே கரோனா தொற்றுக்கு ஆளாகி கடந்த வாரம் விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு உயிரிழந்த நிலையில், வட்டாட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன்படி விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் மற்றும் சார் ஆட்சியருக்கு பரிசோதனை கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்யப்பட்டது. அதில் சார் ஆட்சியர் பிரவீன் குமாருக்கு நேற்று கரோனா  உறுதியானது.  விருத்தாசலம் சார் ஆட்சியருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, சார் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்