
கலைமாமணி விருது பெற்ற நலிந்த நிலையில் வாழும் தூத்துக்குடி மாவட்டம் மேலக்கரந்தை வில்லிசை கலைஞர் சீதா லட்சுமிக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட பொற்கிழி தொகையான ரூபாய் 1 லட்சம் நிதியுதவி, மூன்று மாதங்களை கடந்தும் இதுவரை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் அலைக்கழிக்கப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
அரசின் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் ஆச்சாள்புரம் சின்னத்தம்பி, ஆக்காட்டி ஆறுமுகம், நெல்லை சுந்தர்ராஜன், மதுரை ஜி.எஸ். மணி, மேலக்கரந்தை பி. சீதாலட்சுமி உள்ளிட்ட 10 கலைஞர்களுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் பொற்கிழி தொகையாக தலா ரூபாய் 1 லட்சம் நிதியுதவி 2025 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து பிப்ரவரி 26 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழா அரங்கில் வழங்கி கவுரவித்தார். அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 10 கலைமாமணி விருதாளர்களில் ஒருவரான வில்லிசை கலைஞர் தூத்துக்குடி மாவட்டம் மேலக்கரந்தை பி. சீதாலட்சுமிக்கு, மூன்று மாதங்களை கடந்தும் தற்போது வரை பொற்கிழிக்கான தொகை ரூபாய் 1 லட்சம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து இயல் இசை நாடக மன்ற நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கேட்டால் டிசைன் டிசைனாக பதில் சொல்கிறார்கள். இது நலிந்த நிலையில் உள்ள தன்னை மிகவும் வேதனைப்படுத்தி உள்ளதாகவும், அறிவிக்கப்பட்ட பொற்கிழி தொகை ஒரு லட்சத்தை நல்ல முறையில் தருவதற்கு இயல் இசை நாடக மன்ற நிர்வாகிகள் உதவி செய்ய வேண்டுமென வில்லிசை கலைஞர் சீதாலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.
நலிந்த கலைஞர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் நிதியுதவிக்குப் பரிந்துரை செய்வதற்கும், அந்த நிதியுதவியில் புரோக்கர்கள் வைத்து சிலர் கமிஷன் வசூலிப்பதும், கமிஷன் தராத கலைஞர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உதவிகளை மறைமுகமாக நிறுத்தி வைப்பதாகவும் குற்றச்சாட்டு பொதுவெளியில் எழுந்துள்ளது.
தொன்மையான தமிழ் கலைகளின் வளர்ச்சிக்கும், அழிந்து வரும் கலை வடிவங்களை ஆவணம் ஆக்குவதற்கும் அளப்பரிய பங்களிப்பு அளித்து கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களை அலைக்கழிக்காமல் அரசின் உதவிகளை நல்ல முறையில் வழங்கி காக்க வேண்டியது இயல் இசை நாடக மன்றத்தின் பொறுப்பு என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி