Skip to main content

பரிகார பூஜைக்கு கொண்டு வந்த 1008 பித்தளை செம்புகளை பிடித்த சின்சியர் தேர்தல் அதிகாரிகள் !

Published on 17/03/2019 | Edited on 17/03/2019

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் தமிழகம் முழுவதும் செக்போஸ்டுகளிலும், வீடியோ கேமராமேன் உடன் போலிஸ் தீவிர சோதனை செய்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் தான் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள்.

 

trichy

 

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி-கரூர் சாலை குடமுருட்டி பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில் நேற்று காலை திருச்சி பறக்கும் படை அதிகாரிகள், தனி தாசில்தார் மோகனா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த காரில், கோவையைச் சேர்ந்த டாக்டர் ஒருவரின் மனைவி, கார் டிரைவருடன் வந்தார். காரில் 1,008 பித்தளை செம்புகள், 500-க்கும் மேற்பட்ட சங்குகள் மற்றும் பூஜைக்கான பூக்கள் இருந்தது. அதற்கான ஆவணம் ஏதும் இல்லாததால் பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.

காரில் பித்தளை செம்புகள் மற்றும் சங்குகள் எதற்காக எடுத்து வரப்பட்டது என அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பரிகார பூஜைகள் செய்வதற்காக செம்புகள் மற்றும் சங்குகளை கோவையில் உள்ள ஒரு கோவிலில் இருந்து பெற்று வந்ததாக கூறினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வேளையில், ரூ.10 ஆயிரம் மதிப்புக்கு மேல் உள்ள பொருட்களுக்கு உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும் எனவும், 1,008 செம்புகள், சங்குகள் மற்றும் பூஜைக்காக எடுத்து வந்த பூக்களுக்கு உரிய ஆவணம் ஏதும் இல்லை என்பதால் பறிமுதல் செய்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில், டாக்டரின் மனைவியிடம் தெரிவிக்கப்பட்டது.
 

trichy

 

பின்னர் அவற்றை திருச்சி கிழக்கு தாசில்தார் சண்முகவேலனிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். தாசில்தார் அதனை பார்வையிட்டு ‘சீல்’ வைத்தார். பின்னர் அப்பொருட்கள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கோவிலில் பரிகாரத்திற்கு கொண்டு வந்த பூஜை பொருட்களை பறிமுதல் செய்யபட்டது என்பது என்பதை அறிந்த அவர் அதிர்ச்சியுடன் சென்றார். இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ என்று புலம்பிய படி சென்றார். ! 

அர்ச்சனை செய்ய பொருட்களை எழுதி கொடுத்த ஐய்யரிடம் நா என்ன சொல்லுவேன் என்று ஆதங்கத்துடன் சென்றார். 

 

 

சார்ந்த செய்திகள்