
திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 17.37 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு சத்திரம் புதிய பேருந்து நிலைய பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது 80 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் தரைத்தளம், கடைகளில் கதவுகள் அமைக்கும் பணிகள், சீலிங் அமைக்கும் பணிகள் என இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ''திருச்சி சத்திரம் பேருந்து நிலைய டெர்மினல் ஒன் பணிகள் ஜுன் மாதம் முடிவடைந்து விடும். டெர்மினல் 2 பணிகள் இன்னும் 3 மாதத்திற்குள் முடிவடைந்து முழு பயன்பாட்டிற்கு வந்துவிடும். அவ்வாறு பயன்பாட்டிற்கு வரும்போது பேருந்துகள் இந்த டெர்மினல்களுக்குள் வந்து 3 நிமிடம் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்ட பின்னர் செல்லும் வசதி அமையும். 53 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து இடையூறின்றி மக்களுக்கு உபயோகமான பேருந்து நிலையமாக இந்த சத்திரம் பேருந்து நிலையம் இருக்கும். திருச்சி, அரியமங்கலம் பகுதியிலுள்ள குப்பை குடோனில் நாள் ஒன்றுக்கு 1,500 டன் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கப்பட்டு வருகிறது. ஒரு வருடத்திற்குள் குப்பைககள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிடும். வாட்ஸ் அப் மூலம் 100 சதவீதம் மாணவர்களை தொடர்பு கொள்ள முடியுமா என்கின்ற சந்தேகம் உள்ளது. நிறைய மாணவர்களிடம் இன்னும் ஸ்மார்ட் போன் கூட இல்லாத நிலை உள்ளது. இருப்பினும் மாணவர்கள் படிப்பறிவு விட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக அலகு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
புதிய கல்விக்கொள்கை குறித்து மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. ஆசிரியர்களுக்கு சம்பளத்தை பாதியாக குறைத்து கரோனா முன் களப்பணியாளர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்துவது குறித்து பள்ளி கல்வித்துறைக்கு அதிக அறிவுறுத்தல் வருகிறது. இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று முடிவெடுக்கப்படும்'' என்று அவர் கூறினார்.
முன்னதாக மணப்பாறை அரசு மருத்துவமனை அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.