Skip to main content

“10 வருடங்களாக அனுமதி அளிக்காத ஒன்றிய அரசு... முன்னெடுக்கும் முதலமைச்சர்...” - மா.சுப்பிரமணியன்

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

"The Union Government has not given permission for 10 years.. the Chief Minister will take it forward.." - Ma. Subramanian

 

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், ஆலமரத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு கட்டடம், அய்யம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்களுக்கான இரண்டு குடியிருப்பு கட்டடம், ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கொசவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தா பிரிவு கட்டடம், கொடைரோடு அம்மையநாயக்கனூரில் புதிய துணை சுகாதார நிலையம் என ரூ. 1.58 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கான திறப்பு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் முனைவர் விசாகன் தலைமை தாங்கினார். பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார பணிகள் துணை இயக்குநர் வரதராஜன் வரவேற்று பேசினார். விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு கட்டடங்களை திறந்து வைத்தனர். 

 

அதன் பின் பொதுமக்கள் மத்தியில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, “தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் போதுதான் கிராமங்களில் சுகாதார நிலைய கட்டடங்கள் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டு வருகின்றன. 1989ம் ஆண்டு நான் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றபோது குறைந்தது 5 ஏக்கர் நிலமும், 25 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் தொகையும் உள்ள இடங்களில் தான் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் எனது வேண்டுகோளை ஏற்று ஆலமரத்துப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வந்தார். தற்போது தமிழக முதல்வராக இருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எண்ணற்ற மக்கள் நலனுக்கான திட்டங்களை மருத்துவத் துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறார். 

 

கொரோனா பெருந்தொற்றில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற தமிழக முதல்வரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் எடுத்துக் கொண்ட பணிகள் மகத்தானது. திமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த கலைஞர், பண்ணைக்காட்டில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையை கட்டிக் கொடுத்ததால் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பயன்பெற்றுள்ளனர். ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமமான ஆடலூர், பன்றிமலை, கேசிபட்டி, மலையாண்டிபுரம் உட்பட்ட மலை கிராம மக்களின் நலனுக்காக ஆடலூர், பன்றிமலையில் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளேன். விரைவில் அதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிடுவார்” என்று கூறினார்.

 

அதன் பின் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் தேர்தல் நேரத்தின்போது மலைக் கிராம மக்களுக்கு வாக்குறுதி கொடுப்பார்கள். அதன் பின்னர் அதனை மறந்துவிடுவார்கள். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி, கொரோனா தொற்றாக இருக்கட்டும், தமிழக முதல்வர் அறிவித்த நகைக்கடன், பயிர்க் கடனாக இருக்கட்டும் அனைத்திலும் நூறு சதவிகிதம் செயல்படுத்தி வெற்றி கண்டவர். 

 

மலைக் கிராம மக்கள் நலனுக்காக ஆடலூர், பன்றிமலை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் கேட்டுள்ளார். ஒன்றிய அரசு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. தற்போது தமிழகம் முழுவதும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியால் 20க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் வர உள்ளன. அதில் 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆடலூர், பன்றிமலையிலும், ஒட்டன்சத்திரம் தொகுதியிலும் அமைய உள்ளது. மலைக் கிராம மக்களின் நலனில் அதிக அக்கறையோடு செயல்படும் கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்றத்தில் மக்கள் நல்வாழ்த்துறை சார்பாக 136 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் 18 அறிவிப்புகள் திண்டுக்கல் மாவட்ட அறிவிப்புகள்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்