
திருச்சி, தா.பேட்டை நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சரவணன் (62). ஆடுமேய்க்கும் தொழிலாளியான இவர், கடந்த 17-ந் தேதி கொலை செய்யப்பட்டு கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று தா.பேட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த 16 வயது மதிக்கத்தக்க 2 சிறுவர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், 2 பேரும் சேர்ந்து சரவணனை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது. மேலும் அந்த சிறுவர்கள் அங்குள்ள பள்ளியில் 11 ,12-ம் வகுப்பு படித்து வருகின்றனர். சிறுவர்கள் 2 பேரும் கடந்த 16ம் தேதி கிணற்றில் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் நெசவாளர் காலனி சரவணன் வீட்டு வாசலில் ஈரத் துணிகளைப் பிழிந்துள்ளதாகத் தெரிகிறது.
அதனை சரவணன் கண்டித்த போது, சிறுவர்களுக்கும், சரவணனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதால் அப்பகுதியில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். பின்பு ஆடுகளுக்கு புல் அறுப்பதற்காக அப்பகுதியில் வயலுக்கு சென்ற சரவணனுக்கும், அங்கு நின்று கொண்டிருந்த சிறுவர்களுக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முதியவர் சிறுவர்களின் பெற்றோர்களிடம் இதுகுறித்து கூறிவிடுவதாக கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் தடியால் முதியவர் சரவணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் வலி தாங்க முடியாததால் முதியவர் சரவணன் சத்தம் போட்டதால் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். அதில் முதியவர் கீழே விழுந்துள்ளார். அதன் பின்னர் முதியவரை சிறுவர்கள் 2 பேரும் அப்பகுதியில் உள்ள கிணற்றுக்குள் உடலைத் தூக்கி வீசியுள்ளனர். நேற்று நடைபெற்ற சமயபுரம் தேர்த்திருவிழாவிற்கு சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து தப்பி சென்றிட திட்டமிட்டுள்ளனர். ஆனால், நேற்று போலீசில் சிக்கியுள்ளனர். பின்னர் போலீசார் 2 சிறுவர்களையும் கைது செய்து திருச்சியில் உள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.