Skip to main content

ஆளுங்கட்சிக்கு ‘பேக்கேஜிங்’ பார்த்த திருச்சி உளவுத்துறை அதிகாரிகள்!

Published on 03/05/2021 | Edited on 03/05/2021

 

trichy admk

 

எந்தவொரு நாடாக இருந்தாலும், மாநிலமாக இருந்தாலும் உளவுத்துறையே அதன் பாதுகாப்பின் முதுகெலும்பாகும். இவர்கள், மாவட்டம் மற்றும் தாலுகா வாரியாக காவல்துறை தலைமையகம் மற்றும் காவல் நிலையங்களில் பணியாற்றிக்கொண்டு, அன்றாடம் நடக்கும் குற்றச்செயல்கள் முதல் நாட்டு நடப்பு மற்றும் அரசியல் சூழல்கள் வரை அவ்வப்போது தங்கள் மேலிடத்திற்கு தகவல்களை தெரிவிப்பார்கள். இதனை அடிப்படையாகக்கொண்டே அரசும் முக்கிய முடிவுகளை எடுப்பது வழக்கம். ஒவ்வொரு முறையும் புதிய அரசு பதிவியேற்ற உடனேயே இந்த உளவுத்துறை காவலர்களின் முந்தைய செயல்பாடுகளைக் கவனத்தில் கொண்டு, அவர்களைப் பணியிடமாற்றம் செய்வதோ அல்லது அதே இடத்தில் நீட்டிக்க வைப்பதோ உண்டு. 

 

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் இரண்டு உளவுத்துறை அதிகாரிகளை உடனே பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை காவல்துறை வட்டாரத்தில் இருந்து தற்போது கசிந்துள்ளது. அதாவது, திருச்சி மாநகர உளவுத்துறையில் பணியாற்றி வரும் கணித மேதையின் பெயர் கொண்ட ஆய்வாளரும், அதே பிரிவில் பணியாற்றும் ‘மணக்கும்’ சிரிப்பு நடிகரின் பெயர்கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளரும் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திருச்சியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்காக களமிறங்கி வேலை பார்த்ததாகவும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் எந்தெந்த பகுதிகளில் வீக்காக உள்ளது? 

 

அதிமுக வேட்பாளர்கள் தங்கள் நிர்வாகிகள் மூலமாக ஓட்டுக்காக ஒப்படைத்த பணம் முழுமையாக பொதுமக்களை சென்று சேர்ந்ததா? போன்ற தகவல்களை அவ்வப்போது சேகரித்து, அந்தந்த அதிமுக வேட்பாளர்களுக்குத் தெரியப்படுத்தி வந்ததாகவும், தனியார் நிறுவனங்களைப் போல அவர்களுக்காக ‘பேக்கேஜிங்’ அடிப்படையில் பணியாற்றியதாகவும், இதற்காக, அந்த உளவுத்துறை அதிகாரிகள் இருவரும் ஒவ்வொரு வேட்பாளரிடமிருந்தும் பல லகரங்களைக் கூலியாக பெற்றதாகவும் அதிர்ச்சித் தகவல்களைக் கசிய விடுகிறது திருச்சி காவல்துறை வட்டாரம். காவல்துறையின் அந்த 2 கருப்பு ஆடுகளையும் பின்னின்று இயக்கியது இதே திருச்சி மாநகர நுண்ணறிவுப் பிரிவில் இதற்கு முன்பு உதவி ஆணையர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற நான்கெழுத்து பெயர்கொண்ட அதிகாரியும், அவருக்கு முன்பு அதே சீட்டில் இருந்து ஓய்வுபெற்ற மூன்றெழுத்து அதிகாரியும்தான் என அடித்துக் கூறுகிறது விபரமறிந்த அந்த வட்டாரம். 

 

காரணம், பணி ஓய்விற்கு பிறகும் தங்களின் அரசியல் தொடர்புகள் மூலம் காரியங்கள் சாதித்து, அதன் மூலமும் அவர்கள் வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. எனவே, தற்போது திமுக ஆட்சியமைக்க இருக்கும் நிலையில் ஓய்வுபெற்ற அந்த இரு அதிகாரிகளும் தங்களுக்கு வேண்டிய சிலர் மூலம் திமுக முக்கியப் புள்ளிகள் சிலரை அணுக முயற்சி செய்து வருவதாகவும், அவர்கள் மூலமாக அந்த 2 கருப்பு ஆடுகளும் இதே உளவுத்துறையில் தொடர முயற்சி செய்து வருவதாகவும் கூறும் காவல்துறை வட்டாரம், ‘அந்த இருவரையும் உடனே களையெடுத்தால் மட்டுமே திருச்சி சிட்டியில் காவல்துறையால் சிறப்பாக செயல்பட முடியும்’ எனவும் சைரன் அடிக்கிறது. திருச்சி மாநகரக் கவல்துறையின் இந்தப் புலம்பல்கள் புதிய ஆட்சியாளர்களின் காதுகளை எட்டுமா...?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.