ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகத்தின் பல நீர்நிலைகளில் குளித்து மக்கள் வழிபடுவது வழக்கமாகும். ஈரோடு மாவட்டம் பவானி, கொடுமுடி ஆகிய பகுதிகளில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆற்றில் இறங்கி மக்கள் குளித்து வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே வெங்கப்பூர் பகுதியில் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பலர் குளிக்கச் சென்றனர். அதில் குப்புராஜ், ஜெகதீசன், 14 வயது சிறுமி உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தற்போது சிறுமியின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இருவரின் உடலை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆடிப்பெருக்கு நாளிலேயே ஆற்றில் நீராடிய மூன்று பேர் உயிரிழந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கொடுமுடியில் நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்குத் தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு அரசின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.