Skip to main content

கொடுமுடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

Published on 30/04/2023 | Edited on 30/04/2023

 

 Tractor seized for sanding without permission near Kodumudi

 

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த கொந்தளம் கிராமம், கொம்பனைபுதூர், நால்ரோடு பகுதியில் ஆற்றில் ஒரு டிராக்டரில் அனுமதியின்றி மணல் ஏற்றிக் கொண்டிருப்பதாக கொடுமுடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு அனுமதியின்றி டிராக்டரில் மணல் ஏற்றிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அந்த டிராக்டரை பிடித்து அதிகாரிகள் சோதனை செய்தபோது இரண்டு யூனிட் மணல் இருப்பது தெரியவந்தது.

 

மேலும் அந்த டிராக்டர் உடன் பதிவு இல்லாத டிரெய்லர் இருப்பதும் தெரியவந்தது. டிரைவரை பிடித்து விசாரித்தபோது அவர் சேலம் மாவட்டம் நல்லசொல்லிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (32) என தெரிய வந்தது. அவரிடம் விசாரித்தபோது கொடுமுடி பகுதியை இருந்த குணசேகரன் என்பவரிடம் டிரைவராக பணியாற்றி வந்தது தெரிய வந்தது. போலீஸ் விசாரணையில் பல்வேறு தகவல் வெளியாகின. தற்போது கொளத்துப்பாளையம் பகுதியில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் ஒப்பந்ததாரராக சிவகிரி அஞ்சூர் ,முத்து கவுண்டன் பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து என்பவர் இருந்துள்ளார். இந்த கட்டிடம் கட்டுவதற்காக தேவையான மணலை செல்லமுத்து வற்புறுத்தலின் பேரில் குணசேகரன் தனது டிரைவர் சூர்யாவை அனுப்பி அனுமதியின்றி மணலை டிராக்டரில் ஏற்றி வந்தது தெரியவந்தது.

 

இதுகுறித்து கொடுமுடி வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் டிரைவர் சூர்யாவை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்திய டிராக்டரை கொடுமுடி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் குணசேகரன் மற்றும் செல்லமுத்துவை தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.