Skip to main content

யாருக்கும் பயப்படாமல் பெண்கள் உலகைச் சுற்றி வரலாம்! - அனுபவம் பகிரும் மலையேற்ற சாதனைப் பெண் முத்தமிழ்செல்வி!     

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Tn woman has achieved a record by climbing the 6962 meters high Aconcagua peak.

தென் அமெரிக்க கண்டம், அர்ஜெண்டினாவில் உள்ள 6,962 மீட்டர் உயரமுள்ள அக்கோன்காகுவா (Aconc Agua) சிகரத்தில் ஏறி சாதனை புரிந்து சென்னை திரும்பிய மலையேற்ற சாதனைப் பெண் முத்தமிழ்செல்விக்கு சென்னை விமான நிலையத்தில் மாணவர்கள்,  உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏழு  கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை ஏறத் திட்டமிட்டு, நான்காவதாக இந்த மலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் நபராக ஏறி சாதனை புரிந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ்செல்வி (வயது34). தற்போது, சென்னை மண்ணிவாக்கத்தில் வசிக்கிறார். நான்காவது சாதனைப் பயணமாக தென் அமெரிக்கக் கண்டம், அர்ஜெண்டினாவில் உள்ள 6962 மீட்டர் உயரமுள்ள  அக்கோன்காகுவா (Aconc Agua) சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

உலகிலேயே அதிக உயரமுள்ள 1. ஆசியா கண்டம், மவுண்ட் எவரெஸ்ட் சிகரம் 8848 மீட்டர், 2. ஐரோப்பா கண்டம், மவுண்ட் எல்ப்ரஸ் சிகரம் 5642 மீட்டர், 3. ஆப்பிரிக்க கண்டம் மவுண்ட் கிளிமஞ்சாரோ 5895 மீட்டர் ஆகிய மூன்று கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை அடைந்திருக்கிறார். 4. தென் அமெரிக்க கண்டம் அர்ஜெண்டினாவில் உள்ள 6962 மீட்டர் உயரம் உள்ள அக்கோன்காகுவா (Aconc Agua) சிகரத்தில் ஏறியிருக்கிறார். இது உலக அளவில் எவரெஸ்ட் சிகரத்திற்கு அடுத்துள்ள உயரம்  அதிகமானதாகும். மலையேற்ற சாதனை தமிழ்ப் பெண் முத்தமிழ்செல்விக்கு சென்னை விமான நிலையத்தில் படப்பை ஆல்வின் இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சால்வைகள் போர்த்தியும், மலர்க்கொத்துகளை கொடுத்தும் வரவேற்றனர். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த  முத்தமிழ்செல்வி,  “உலகின் ஏழு கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை அடைந்து சாதனை புரியத்  திட்டமிட்ட நிலையில்,  தற்போது நான்காவது சிகரத்தை அடைந்துள்ளேன். மிகவும் கடுமையான மைனஸ் 35 டிகிரி குளிரில்  கடும் காற்றிலும்  போதிய  உணவு கிடைக்காமலும்,  இச்சாதனையை  முதல் தமிழராய் சாதித்துள்ளேன். இந்தத் தகவலை அறிந்த தமிழக இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவரும்  அமைச்சர் தங்கம் தென்னரசு, படப்பை மனோகரன் போன்றோரும் நிதியுதவி வழங்கினார்கள்.

இந்த நேரத்தில், அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மார்ச் மாதம் ஆஸ்திரேலியா, அதனைத் தொடர்ந்து வட அமெரிக்கா என மூன்று சிகரங்களை ஏறி,  இந்த ஆண்டுக்குள் ஏழு கண்டங்களையும் ஏறி  சாதனையை முழுமை செய்வேன். வாழ்க்கையில் வெற்றியைத் தவறவிட்டால் சோர்ந்துவிடக் கூடாது. நல்ல சாதனை மனிதர்களாக மாற மீண்டும் மீண்டும் தங்களை மெருகேற்றிக் கொள்ளவேண்டும். பெண்கள் நினைத்தால் யாருக்கும் பயப்படாமல் உலகையே சுற்றி வரலாம். சாதனை புரிந்து தங்களின் திறமையை வெளிக்காட்டி மதிப்புமிகு வாழ்க்கையை வாழலாம்.” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

இளம் பெண் ரயில் நிலையம் அருகே கொடூரக் கொலை; பின்னணி என்ன ?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
A young woman from Chennai was passed away near Gudiyattam railway station

வேலூர் மாவட்டம் குடியாத்தம், சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தீபா. 30 வயதான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் திருமணமாகி விவாகரத்து பெற்று தனது தாயாருடன் வசித்து வந்தார்.

கடந்த 14ஆம் தேதி அலுவல் காரணமாக குடியாத்தம் சென்று வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு வந்தவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. எங்கே போனாலும் மகள் தினமும் தன்னுடன் பேசிவிடுவார் அப்படி இருக்க செல்போன் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். தன்னையும் தொடர்பு கொள்ளவில்லை என்பதால் அவர் பயந்து போனார்.

இதுகுறித்து அவரது தாயார் கடந்த 16ஆம் தேதி சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட புளியந்தோப்பு போலீசார் செல்போன் எண்களை ஆராய்ந்து அம்பத்தூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த குடியாத்தம் அடுத்த சின்ன நாகால் பகுதியை சேர்ந்த ஹேம்ராஜ் (25) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் கடையில் பணியாற்றி வந்த தீபா உடன் ஹேம்ராஜிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இளம் பெண்ணை தள்ளிவிட்ட வழக்கில் ஹேம்ராஜ் 11 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே இவரது மொபைல் எண்ணிற்கு தீபா குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசிய ஹேம்ராஜ் தான் ரயில்வேயில் பணிக்காக தேர்வுக்காக தயாராகி வருவதாகவும் நீயும் ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அதற்கான புத்தகங்கள் தன்னிடம் உள்ளதாக கூறி கடந்த 14ஆம் தேதி குடியாத்தம் ரயில்வே நிலையத்திற்கு தீபாவை ஹேம்ராஜ் வரவழைத்துள்ளார்.

இதனையடுத்து குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள மலையடிவாரத்திற்கு தீபாவை அழைத்துச் சென்று அங்கு தீபாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அங்கே இருவருக்கும் உருவான பிரச்சனையில் தீபா தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்னைக்குச் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து ஹேமராஜை கைது செய்த குடியாத்தம் போலீசார் கொலைக்கான காரணம் உண்மைதானா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் இருந்து ஒரு பெண்ணை கீழே தள்ளி கொலை குற்ற வழக்கில் சிறையில் இருந்தவன், ரயில்வே தேர்வு எழுதுகிறேன் என ஒரு படித்த பெண்ணிடம் சொல்ல இதை அவர் எப்படி நம்பினார்? இவன் சொல்வது உண்மையான காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னையில் காணாமல் போன இளம் பெண் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.