திருப்பத்தூர் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்தவன் 25 வயதான சுரேஷ். குடிபோதையில் ஜனவரி 12ந்தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை மிட்டாய் தருவதாக சொல்லி ஏரிக்கரைக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான். அந்த சிறுமி அழுதுக்கொண்டே வீட்டுக்கு வந்து தன் தாயாரிடம் சொல்லியுள்ளார்.

அதிர்ச்சியான அவர் மகளை பார்த்தபோது, கால்வழியாக ரத்தம் வழிந்துள்ளது. உடனடியாக அழுதபடி மகளை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த சிறுமியின் தாயார் கதறிய கதறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடி என்னவென விசாரித்துள்ளனர். அப்போது அந்த சிறுமி நடந்ததை கூறியுள்ளார். சம்மந்தப்பட்ட சுரேஷ்சை பொதுமக்கள் தேடியுள்ளனர். பாலியல் பலாத்காரம் குறித்த புகார் கந்திலி போலீஸாருக்கு சென்றுள்ளது. அவர்களும் சுரேஷ்சை தேடியுள்ளனர்.
இரவு 8 மணியளவில் அதே ஊரில் உள்ள ஒரு மாந்தோப்பில் ஒரு சிறிய மரத்தில் சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டான் என போலீஸாருக்கு தகவல் சென்றுள்ளது. போலீஸார் வந்து பார்த்தபோது, ஒரு சிறிய மரத்தில் உடல் தொங்கிக்கொண்டு இருந்தது. அவன் உட்கார்ந்தபடி இருந்துள்ளான், கழுத்தில் கயிறு இருந்துள்ளது. இது தொடர்பாக கந்திலி போலீஸார் வழக்கு பதிவு செய்து, உண்மையில் அவன் தற்கொலை செய்துக்கொண்டானா? அல்லது யாராவது கோபத்தில் அடித்து கொலை செய்துவிட்டு அவனை தூக்கில் தொங்கவிட்டார்களா என விசாரணை நடத்திவருகின்றனர்.