Skip to main content

கரூரில் இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம்; மூவர் கைது

Published on 11/03/2025 | Edited on 11/03/2025
 Three arrested in Karur after young woman was kidnapped

கரூரில் இளம்பெண் ஆம்னி வேனில் கடத்தப்பட்ட சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் நேற்று பொன்மலை பகுதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அருகே உள்ள அரசு கலை கல்லூரிக்கு சக தோழிகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆம்னி வாகனத்தில் வந்த இளைஞர்கள் சிலர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அங்கிருந்து கடத்திச் சென்றனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியைக் கடத்தியது அவரின் உறவுக்கார இளைஞர் என்பது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட மாணவியை அந்த இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், இருவருடைய புகைப்படங்களையும் இணைத்து சமூகவலைத்தள பக்கத்தில் அந்த இளைஞர் வீடியோ வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட இளைஞரை திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட கோபத்தில் மாணவியை வலுக்கட்டாயமாக அந்த இளைஞர் ஆம்னி வேனில் கடத்தி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் மாணவியை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்த நிலையில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு குஜிலியம்பாறை பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் மாணவி அடைத்து வைக்கட்டப்பட்டிருந்தது தெரிந்து அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டனர். மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் கடத்தலில் ஈடுபட்ட நந்தகுமார் மற்றும் அவரது நண்பர்கள் இருவரை தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வரும் நிலையில், இன்று மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்