
கடல்சார் படிப்புகள் முடிக்கும் மாணவர்களுக்குத் தற்போது அதிக வாய்ப்புகள் இருப்பதாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்திலன் துணை வேந்தர் தெரிவித்தார். அதேபோல், பல வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்புகளும், அதிக சம்பளத்தில் வேலை செய்யும் வாய்ப்புகளும் இருக்கிறது என கூறினார். இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாலினி வி. சங்கர் கூறியதாவது, “சென்னையைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் சென்னை, கொச்சி, கொல்கத்தா, மும்பை, நவி மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய ஆறு இடங்களில் உள்ளன.
இந்தப் பல்கலைக்கழகத்தில் பி.டெக் (மரைன் இன்ஜினீயரிங் மற்றும் நேவல் ஆர்க்கிடெக்சர்), எம்.டெக். (மரைன் இன்ஜினீயரிங் மற்றும் நேவல் ஆர்க்கிடெக்சர்), எம்.டெக். (டிரட்ஜிங் அண்ட் ஹார்பர் இன்ஜினீயரிங்), எம்.பி.ஏ (இண்டர்நேஷனல் டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ்), எம்.பி.ஏ (போர்ட்ஸ் அண்ட் ஷிப்பிங் மேனேஜ்மெண்ட்), பி.எஸ்.சி (நாட்டிக்கல் சயின்ஸ்) உட்பட 11 விதமான இளநிலை, முதுநிலை, முதுநிலை டிப்ளமோ படிப்புகள் உள்ளன. கரோனா சூழல் காரணமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பி.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடல்சார் தொடர்பான படிப்புகளுக்கு வேலைவாய்ப்பு மிகுதியாக இருக்கிறது.

பி.டெக். முடிப்பவர்களை மாதம் மூன்று லட்சம் வரையிலான சம்பளத்தில் முன்னணி நிறுவங்கள் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வு செய்கின்றனர். கடல்சார் படிப்புகள் முற்றிலும் உறைவிட படிப்புகளாகும். பி.டெக். படிப்புக்கு ஆண்டுக்கு இரண்டு லட்சம் செலவாகும். எங்கள் மாணவர்களுக்கு வங்கிகளில் எளிதில் கல்விக்கடன் கிடைக்கும். காரணம், படித்து முடித்ததும் உடனடியாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்துவிடும். நடப்பு கல்வி ஆண்டில் பி.டெக். படிப்புகளில் சேர 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் தரவரிசை பட்டியல் 2 வாரத்தில் வெளியிடப்பட்டு, தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்படும்.
அக்டோபரில் வகுப்புகள் தொடங்கும். கல்வி, ஆராய்ச்சி, மாணவர் பரிமாற்றம் திட்டம் தொடர்பாக ரஷ்யா, பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து, மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் முன்னணி கடல்சார் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். மேலும், இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம், நியாட், இந்திய டிரெட்ஜிங் கார்ப்பரேஷன், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் போன்றவற்றுடனும் ஒப்பந்தம் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்” என அவர் கூறினார்.