Published on 01/05/2020 | Edited on 01/05/2020

பேரிடர் கால உதவியாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளத்தை கொடுக்க முதல்வர் ஆணையிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து செந்தில்குமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, "26-8-2011 சட்டசபையில் 110 விதியின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். இதற்காக ஆண்டிற்கு அனைத்து மாதங்களுக்கும் சம்பளம் வழங்க ரூ. 99 கோடியே 29 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் நியமனம் செய்த பின்னர் மே மாதம் சம்பளம் தருவதில்லை. நியமன அரசாணையில் 11 மாதத்திற்கு மட்டுமே சம்பளம் என்று குறிப்படாதபோது, கல்வித்துறையில் ஒருமாதம் சம்பளம் பிடித்தம் செய்து வருவது மிகவும் வருந்ததக்கது. இப்படியே மே மாதம் சம்பளம் கொடுக்காமல் 8 ஆண்டுகள் முடிந்து விட்டது.
ஒரு மாதம் சம்பளம் கொடுக்காமல் அடுத்த மாதம் எப்படி குடும்பத்தை நடத்துவது. அதிலும் இந்தமுறை கரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் நிலை மிகவும் கவலையுடன் உள்ளது. இந்த கஷ்டமான நேரத்தில் மே மாதம் சம்பளம் ரூ 7700 கொடுத்தால் பேருதவியாக இருக்கும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நியமனம் செய்த 16,549 பேரில், தற்போதுள்ள 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களை காப்பாற்ற, இந்தமுறை ஒருமாதம் சம்பளமான ரூ 7700-ஐ மே மாதம் சம்பளத்தை கொடுத்து பேருதவி செய்திட முதல்வர் அவர்கள் ஆணையிட வேண்டும். இதற்காக சுமார் 10 கோடி நிதி ஒதுக்கி ஒரு நிவாரணமாக இம்முறை வழங்க எதிர்பார்க்கின்றோம். இக்கட்டான நேரங்களில் அரசுக்கு துணை நின்றதை கவனத்தில் கொண்டு இந்த சம்பளத்தை வழங்க வேண்டும்.
முதல்வர், துணைமுதல்வர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் ஒருங்கிணைந்து நல்ல முடிவெடுத்து நிதி ஒப்புதல் பெற்று மே மாதம் சம்பளம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கிடைக்க ஆணையிட வேண்டுகிறோம்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.