Skip to main content

டெல்லி அரசின் மாதிரி பள்ளியைப் பார்வையிட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! (படங்கள்) 

Published on 01/04/2022 | Edited on 01/04/2022

 

மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (01/04/2022) டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, டெல்லி அரசின் நவீன முறையில் கட்டப்பட்டு, இயங்கி வரும் மாதிரி பள்ளியை அம்மாநில முதலமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாணவ, மாணவியர்கள் ரோஜா பூ வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். பள்ளியில் செய்யப்பட்டுள்ள அதிநவீன வசதிகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதலமைச்சர், நீச்சல் குளம், வகுப்பறை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். மேலும், மாணவ, மாணவியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். 

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "டெல்லியைப் போன்று விரைவில் தமிழ்நாட்டிலும் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த பணிகள் முடிவுற்று பள்ளிகள் உருவாக்குகிற நேரத்தில் நிச்சயமாக, முதலமைச்சர் கெஜ்ரிவாலை நாங்கள் அழைக்கவிருக்கிறோம். அவர் தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் உங்கள் மூலமாக அவரை நான் அழைக்கிறேன். கல்விக்கும், மருத்துவத்திற்கும் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்றார். 

 

அதைத் தொடர்ந்து பேசிய டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசுப் பள்ளியைக் காட்சிப்படுத்தியது எங்களுக்கு கிடைத்த பெருமை" எனத் தெரிவித்தார். 

 

அதைத் தொடர்ந்து, டெல்லி அரசின் மொகாலா கிளினிக்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, மருத்துவர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். 

 

இந்த நிகழ்வின் போது, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க.வின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., டெல்லி மாநிலத் துணை முதலமைச்சரும், கல்வித்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா மற்றும் டெல்லி மாநில அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.