Skip to main content

நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் திடீர் தீ விபத்து

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

Sudden fire in Neyveli NLC mine

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் திறந்தவெளி சுரங்கங்களின் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, அதிலிருந்து அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  முதலாவது சுரங்கம், முதலாவது சுரங்கம் விரிவாக்கம், இரண்டாவது சுரங்கம் என 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.

 

இந்நிலையில், என்.எல்.சியில் உள்ள முதலாவது சுரங்கம் விரிவாக்கத்தில், நேற்று நள்ளிரவு நிலக்கரியை சுரங்கத்தில் இருந்து வெளியே கொண்டு வரும் கன்வேயர் பெல்ட் இயந்திரம் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின்கசிவால் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் வான் உயரத்திற்கு தீயானது பரவி, சுரங்கம் முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது.  சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டதால்  அப்பகுதியில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.  

 

Sudden fire in Neyveli NLC mine

 

பின்னர், என்.எல்.சி தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 2 கோடி மதிப்பிலான கன்வேயர் பெல்ட் இயந்திரம் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. என்.எல்.சி முதலாவது சுரங்க விரிவாக்கத்தில் இயந்திரம் தீப்பற்றி எரியக்கூடிய வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

தொடர்ச்சியாக நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால், தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அனைத்து சங்க தொழிலாளர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்