Skip to main content

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு 101 சதவீத வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது - அரசு தரப்பு

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் விஷயத்தில், தமிழக அரசு ஒத்துழைக்க மறுப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

 

chennai high court

 

சிலைகடத்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பணி நியமனம் தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுக்கு ஓய்வூதியம் 70 ஆயிரம் ரூபாயுடன் சேர்த்து, சிறப்பு அதிகாரி பணிக்கு 50 ஆயிரம் ரூபாய் ஊதியம் என 1.20 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாக கூறி, அதுதொடர்பான அரசாணைகளை கூடுதல் தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
 

ஆனால், சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காதது குறித்தும், சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு இருக்கைகள் கூட வழங்கப்படவில்லை எனவும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக அரசு ஒத்துழைப்பதில்லை எனவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
 

இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், நிதி விவகாரங்கள் தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க முடியும் என உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளதாகவும், தனக்கு தேவையான வசதிகள் குறித்து சிறப்பு அதிகாரி, அரசு அதிகாரிகளை சந்தித்து தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
 

மேலும், மற்ற சி.ஐ.டி பிரிவினரைவிட சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு 101 சதவீத வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது தவறு எனவும் விளக்கமளித்தார். அதுமட்டுமின்றி சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு செய்து கொடுத்துள்ள வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்வதாக விளக்கமளித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்