Skip to main content

திருவண்ணாமலை கோவிலுக்காக போராடிய கலைஞருக்கு சிலை! 

Published on 11/07/2022 | Edited on 11/07/2022
A statue for the Kalaignar who fought for the Tiruvannamalai temple!

 

திருவண்ணாமலை – வேலூர் – காஞ்சி சாலை இணையும் இடத்தில் அண்ணா நுழைவாயில் மேற்குப்புறம் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞரின் எட்டு அடி உயர வெண்கலத்தால் செய்யப்பட்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் நாத்திகருக்கு சிலைவைத்தால் கிரிவலம் வரும் லட்சக் கணக்கான பக்தர்கள், ஆன்மீகவாதிகள் மனம் புண்படும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் ஒருவர். அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாத்திகருக்கு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சிலை எதற்கு எனக் கேள்வி எழுப்பினார் பாஜக தேசிய நிர்வாகியான எச்.ராஜா.

 

 
கலைஞர் நாத்திகராக இருந்தாலும் ஆன்மீகவாதிகளையும், ஆன்மீக நம்பிக்கையாளர்களையும் வெறுத்தவரல்ல. அதனால்தான் அவரை தேடிவந்து சந்தித்தார்கள் புட்டர்பதி சாய்பாபாவும், கேரளா அமிர்தானந்தமாயி, திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் கோவில் அர்ச்சகர்கள். அரசியல் செய்யாத ஆன்மீகவாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் நன்கு தெரியும் ஓடாத திருவாரூர் ஆழித் தேரை ஓடவைத்தவர் கலைஞர் என்பது. அப்படிப்பட்ட கலைஞர் தான் திருவண்ணாமலை கோவிலை காப்பாற்றியவர் என்பது இன்று பலருக்கு தெரிவதில்லை. 

 


2002ம் ஆண்டு, இந்திய ஒன்றியத்தை பாஜக ஆட்சி செய்துகொண்டு இருந்தது. பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் தொல்பொருள் துறை அமைச்சராக இருந்தவர் ஜஸ்வந்த்சிங். கிரிவலப்பாதையில் உள்ள பிரபல ஆசிரமத்தின் நிகழ்ச்சிக்கு வந்தவரிடம், அண்ணாமலையார் கோவில், 14 கி.மீ சுற்றளவுள்ள கிரிவலப்பாதை, 2663 அடி உயரம் உள்ள மலையை தொல்பொருள் துறை கையகப்படுத்தவேண்டும் என மனு தந்தது அந்த ஆசிரமம். கோவிலை வந்து பார்வையிட்டவர், அண்ணாமலையாரை தரிசனம் செய்தார். டெல்லி சென்ற ஒன்றிய அமைச்சர், அண்ணாமலையார் கோவிலை தொல்பொருள்துறை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பினை வெளியிட செய்தார். இதுகுறித்து மக்கள் கருத்து சொல்லலாம் என்றும் அறிவிப்பு வெளியானது. 

 


கோவில் தொல்பொருள்துறை கட்டுப்பாட்டுக்குள் சென்றால், பூஜை விவகாரம் முதல் அனைத்திலும் ஒன்றிய அரசின் அதிகாரிகள் ஒப்புதல் இல்லாமல் சிறு துரும்பையும் கோவிலுக்குள் நகர்த்தமுடியாது என அனைத்து பாதகங்களும் மக்களிடம் பரவியது. இதனால் அதிர்ச்சியான மக்கள், தன்னெழுச்சியாக எதிர்ப்புக்காட்டினர். கோவில் மீட்புக்குழு உருவாக்கப்பட்டு அனைத்து சமயத்தினரும் இணைந்து அண்ணாமலையார் கோவிலை பாதுகாக்க உண்ணாவிரதம், மனிதசங்கிலி, ஆர்ப்பாட்டம், போராட்டம் எனத் தொடர்ச்சியாக நடத்தினர். தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றதில் வழக்கு தொடுக்கப்பட்டது. மக்கள் போராட்டம், சட்ட போராட்டம் என ஒருசேர நடக்க துவங்கியது.

 


2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பிரச்சாரத்துக்காக திருவண்ணாமலை நகருக்கு வந்தார் திமுக தலைவராக இருந்த கலைஞர். எங்கள் கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால், எத்தனை தடைகள் வந்தாலும் அதனை உடைத்து திருவண்ணாமலை கோவிலை மீட்டு தருவேன் என மக்கள் முன்பு வாக்குறுதி அளித்தார். காங்கிரஸ் தலைமையிலான திமுக கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கலைஞர் வலியுறுத்தி, அண்ணாமலையார் கோவிலை தொல்பொருள் துறை கையகப்படுத்தும் அறிவிப்பினை திரும்ப பெறவைத்தார். இதற்காக திருவண்ணாமலை நகர மக்கள் சார்பாக அவருக்கு நன்றியும் தெரிவித்தனர். போராட்டக்குழு, ஆன்மீகவாதிகள் கலைஞரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். நீதிமன்றம் கோவில் வளர்ச்சிக்காக குழு அமைத்து உத்தரவிட்டது. ஒன்றிய அரசின் தொல்பொருள் துறை கட்டுப்பாட்டுக்குள் செல்லவிருந்த கோவிலை மீட்டவர் கலைஞர். அதுமட்டுமல்ல,1988ல் அன்றைய வடாற்காடு அம்பேத்கர் மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் பிரிக்கப்பட்டது.

 


பிரிக்கப்பட்ட மாவட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் கட்ட முடிவு எடுத்தபோது, அதிகாரிகள் கிரிவலப்பாதையில் அரசு கலைக்கல்லூரி எதிரே கட்ட முடிவு செய்து கோப்புகள் தயாரித்து அனுப்பினர். இசையமைப்பாளர் கங்கை அமரன் மற்றும் ஆன்மீகவாதிகள் கோரிக்கையை ஏற்றுக் கிரிவலப்பாதையில் அமைய இருந்த ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தை இடமாற்றம் செய்து உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தினார். அந்த கலைஞரின் சிலைதான் தற்போது திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையைப் பார்த்தபடி, நகர எல்லையில் அமைக்கப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.