Skip to main content

8 வருட தனிமை; மனைவிக்கு சிலை வைத்த கணவர்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

sivakasi old man wife memory statue viral video 

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 70). இவரது மனைவி ஈஸ்வரி. இத்தம்பதியருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வரி இறந்துவிட்டார். மேலும் மகன்கள் மற்றும் மகள்கள் திருமணம் ஆகி அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் நாராயணன் தனது மனைவி ஈஸ்வரி இறந்ததில் இருந்து தனிமையில் வசித்து வந்துள்ளார். மேலும் மனைவியின் பிரிவையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் முன்பு ஈஸ்வரியின் நினைவாக வெண்கல சிலை ஒன்றை நிறுவி வழிபட்டு வந்துள்ளார். இருப்பினும் மனைவியின் முழு உருவ சிலையை வீட்டில் நிறுவும் முயற்சியில் இருந்து வந்துள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து தனது மனைவியின் முழு உருவ சிலிகான் சிலையை வடிவமைக்க பெங்களூரில் உள்ள நிறுவனத்திடம் பணியை ஒப்படைத்திருந்தார். அந்த நிறுவனமானது சிலையை தத்ரூபமாக 9  லட்ச ரூபாய் செலவில் வடிவமைத்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் ஈஸ்வரியின் நினைவு நாளான நேற்று (25.05.2023) அவரது வீட்டில்  சிலையை வைத்து நாராயணன் தனது மகன்கள் மற்றும் மகள்கள் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்