
சீமான்-விஜயலட்சுமி விவகாரத்தில் அண்மையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். சம்மனில் குறிப்பிட்டிருந்த படி சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகாத நிலையில் 28.02.2025 காலை 11 மணிக்கு சீமான் ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள வீட்டில் கடந்த 27 ஆம் தேதி சம்மன் ஒட்டப்பட்டது. அதில், ‘விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து ஒரு சில நிமிடங்களிலேயே சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை அவரது வீட்டில் இருந்து வந்த உதவியாளர் ஒருவரால் கிழிக்கப்பட்டது.
இந்த சம்மனை கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரை சீமான் வீட்டுக் காவலாளி உள்ளே விடாமல் தடுத்ததாகக் கூறப்பட்டு முன்னாள் ராணுவ வீரரான அமல்ராஜ் குண்டுக்கட்டாக இழுத்துச் செல்லப்பட்டார். சீமானின் வீட்டில் நடந்த இந்த சம்பவம் கடந்த 27 ஆம் தேதி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த கைது மற்றும் தாக்குதல் நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜ்,சம்மனை கிழித்த சுபாஷ் ஆகியோர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஜாமீன் கோரி இருவரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. அடுத்த வாரம் மீண்டும் இருவரும் ஜாமீன் மனுத்தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.