Skip to main content

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி!

Published on 14/05/2021 | Edited on 14/05/2021

 

tamilnadu cm and dmk chief wrote the letter

 

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

அந்தக் கடிதத்தில், "நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்குத் தமிழக முதலமைச்சர் என உங்கள் அன்பால் பொறுப்பேற்றுக்கொண்ட உங்களில் ஒருவன் எழுதும் வேண்டுகோள் மடல்.

 

தமிழ்நாட்டு மக்கள் அளித்த தெளிவான தீர்ப்பினால் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்ற தோழமைக் கட்சியினர் சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இந்த வெற்றி மகிழ்ச்சிக்குரியது என்றாலும், கொண்டாட்டத்திற்குரியதாக அமையவில்லை. காரணம், கரோனா இரண்டாவது அலை பரவலின் தாக்கத்தால் இந்தியாவின் பிற மாநிலங்களைப் போலவே தமிழ்நாடும் பேரிடரை எதிர்கொண்டுள்ளது.

 

நாளுக்கு நாள் நோய்த் தொற்று எண்ணிக்கை உயர்வதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் பெரும் கவலையை அளிக்கிறது. அது மக்கள் மனங்களில் அச்சத்தை விளைவிக்கின்ற காரணத்தால், ஆட்சிப் பொறுப்பேற்கும் முன்பாகவே அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தி, மக்களை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் குணமடையவும் வேகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. என் சிந்தை முழுவதும் இந்த எண்ணமே நெற்றிச் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது.

 

மே 7ஆம் நாள், நம் தலைமையில் அமைந்த அரசு போர்க்கால அடிப்படையில் கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும், உயரதிகாரிகளும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறையினரும் மக்கள் நலன் காப்பதில் அயராமலும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றி வருகின்றனர்.

 

முதலமைச்சர் என்ற முறையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் எழுதிய கடிதத்தில், நாள்தோறும் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்திற்குத் தேவை என்பதை வலியுறுத்திக் கேட்டிருந்தேன். பிரதமர் விரைந்து அனுப்பிய பதிலில், உடனடியாக 419 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகத்திற்குத் தருகிறோம் என உறுதியளித்தார். இது நம் தேவைக்கு ஏற்ப முழுமையான அளவு இல்லையெனினும், மாநில அரசின் கோரிக்கைக்கு உடனடியாக செவிமடுத்துச் செயலாற்றியுள்ளார் பிரதமர். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தேவைப்படும் அளவிலான ஆக்சிஜனையும் விரைந்து அனுப்பிட ஆவன செய்வார் என நம்புகிறேன்.

 

தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும், துறை சார்ந்த உயரதிகாரிகளும் மேற்கொண்டுள்ளனர். தனியார் அமைப்புகளும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி உதவுகின்றன. சில தினங்களுக்கு முன்பு, டி.வி.எஸ் மோட்டார் - சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் சீனிவாசன் சர்வீசஸ் அறக்கட்டளை, 18 கோடி ரூபாய் மதிப்பிலான 1,600 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி, மக்களின் உயிர் காத்திட உதவியுள்ளது.

 

உதவிக்கரம் நீட்டுவதில் உயிரினைய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்கள் எப்போதுமே முன்கள வீரர்களாக நிற்பவர்கள். கரோனா முதல் அலையின்போது தொடர்ச்சியான ஊரடங்கினால் எளிய மக்களும், மருத்துவ உதவி தேவைப்படுவோரும் நெருக்கடிக்குள்ளான நிலையில், திமுகவின் சார்பில் 'ஒன்றிணைவோம் வா' என்ற செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. உதவி எண் (Helpline) வழங்கப்பட்டு, அதற்கு வரும் அழைப்புகளின் அடிப்படையில், தமிழகம் தழுவிய அளவில் கட்சியினர் ஆற்றிய அரும்பணி பலருக்கும் பேருதவியாக இருந்தது.

 

கட்சியின் மருத்துவர் அணி சார்பிலும் முழுமையான அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவ முகாம்கள், முகக்கவசம், சானிடைசர் வழங்குதல், ஏழைகளுக்கு உணவு வழங்குதல், வீடு தேடிச் சென்று உதவுதல் எனக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி ஒன்றிய, நகர, பேரூர் கிளைக்கழகச் செயலாளர்கள், கட்சியின் ரத்த நாளங்களாக விளங்கும் உடன்பிறப்புகள் என அனைவருமே தங்களை இப்பணியில் ஈடுபடுத்திக்கொண்டனர்.

 

தங்களுக்கு நோய்த்தொற்று ஆபத்து இருந்தும், இயன்ற அளவு பாதுகாத்துக்கொண்டு, மற்றவர்களுக்கு உதவிய தொண்டுள்ளத்தை உங்களில் ஒருவனான நான் என்றும் மறக்க மாட்டேன். மக்கள் பணியில் நம் கட்சியின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சகோதரர் ஜெ. அன்பழகன், தன் இன்னுயிர் ஈந்ததை யாரால்தான் மறக்க முடியும்! அந்த அளவுக்குப் பேரிடர் காலத்தில் கட்சியின் களப்பணி அமைந்திருந்தது.

 

சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, கரோனா இரண்டாவது அலை குறித்த எச்சரிக்கையினை மருத்துவர்கள் தெரிவித்தபோதும், ‘ஆட்சி அமையட்டும்‘ என்று காத்திராமல், ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் தொண்டாற்றுவதே திமுகவின் முதல் பணி என்ற அடிப்படையில், உங்களில் ஒருவனான நான் வைத்த வேண்டுகோளை ஏற்று கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்கி கட்சியினர்  மேற்கொண்ட பணிகள் பொதுமக்களுக்குப் பாதுகாப்பானதாக இருந்ததுடன், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

 

நம் அரசு அமைந்தபிறகு, கரோனா பரவலைத் தடுப்பதற்கும் பேரிடரிலிருந்து மக்களை மீட்பதற்கும் தெளிவான, உறுதியான முயற்சிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4000 நிவாரணமாக இரண்டு தவணைகளில் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதி என கரோனாகால நடவடிக்கைகளைச் சரிசெய்து, மக்களின் உயிர் காக்கும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

ஆட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுடன் கட்சியின் சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தை மீண்டும் தொடங்கி, மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என உடன்பிறப்புகளைக் கேட்டுக்கொள்கிறேன். கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுடன், நாடாளுமன்ற மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்களும், கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும், செயல்வீரர்களும், கழகத் தொண்டர்களும் களப்பணியாற்றி இந்தப் பேரிடர் நேரத்தில் மக்களின் அடிப்படை, அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

 

1967ஆம் ஆண்டு முதன்முதலாக திமுக ஆட்சி பேரறிஞர் அண்ணா தலைமையில் அமைந்தபோது, ‘சீரணித் தொண்டர் படை’ என்ற அமைப்பை உருவாக்கினார். மக்களுக்கு உதவிடும் வகையிலும் அரசுக்குத் துணையாக இருந்திடும் வகையிலும் செயல்படுவதே சீரணித் தொண்டர் படையின் பணியாக இருந்தது. அத்தகையப் படையினரைப் போலப் பேரிடர் காலத்தில் கட்சியினர் மக்களுக்கு உறுதுணையாக இருந்து பணியாற்ற வேண்டும்.

 

கரோனா பாதிப்பிலிருந்து தமிழகத்தை மீட்க, மக்கள் இயக்கமாகச் செயல்படுவோம் என ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதன் முதற்கட்டமாக, கட்சியினர் களப்பணியாற்றிட வேண்டுகிறேன். குறிப்பாக, சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியினர், தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் பக்கம் உறுதியாக நிற்கவேண்டிய காலகட்டம் இது. அனைத்துக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் இதே வேண்டுகோளை முன்வைத்துள்ளேன்.

 

திமுகவினர் எப்போதும் போல களப்பணியாற்றுவதுடன், நம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகக் கூடுதல் பொறுப்புடனும், தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் எனவும், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து உதவிகளை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். முதலமைச்சர் என்ற மாபெரும் பொறுப்பைத் தோள்களில் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நானும் உடன்பிறப்புகளைப் போலவே களத்தில் இருப்பேன்.

 

களப்பணியாற்றுவோம்; கண்ணீரைத் தடுப்போம். ஒன்றிணைவோம் வா... பேரிடர் காலத்தை வென்றிடுவோம் வா.” இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.