Skip to main content

உணவு தயாரித்து விற்ற மாணவர்கள்; வரும் பணத்தில் ஆதரவற்றோருக்கு சேவை

Published on 07/11/2022 | Edited on 07/11/2022


சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் தங்கள் இல்லத்தில் தயாரித்த உணவுப் பொருட்கள் விற்பனை திருவிழா 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சார்பாக ஒருவார காலத்திற்கு தினசரி நடைபெறுகிறது.

 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் சிறந்த பள்ளியாகப் பெயர் பெற்று விளங்கும் சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. குறிப்பாக அலுவலகத்தை நிர்வகித்தல், விற்பனை திறனை மேம்படுத்துதல் மற்றும் ஆதரவற்றோருக்கு உதவும் மனப்பான்மையை வளர்க்கும் வண்ணம் மாணவர்களை மேம்படுத்தி வருகிறது. ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்கள் சார்பாக ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இவ்வருடமும் வழக்கம்போல் உணவு விற்பனை திருவிழா நடைபெற்றது.

 

பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தினசரி தங்கள் இல்லத்தில் தயாரித்த உணவு பதார்த்தங்களைப் பள்ளியின் இடைவேளையின் போது மற்ற மாணவ மாணவியருக்கு விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தைச் செலவு போக மீதியுள்ள வருவாயைப் பள்ளி முதல்வரிடம் வழங்கி தொண்டு நிறுவனங்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். நேற்று 8ம் வகுப்பு மாணவர்களுக்கான உணவுப் பொருட்கள் விற்பனை விழா நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் இல்லத்தில் தயாரித்த முறுக்கு, சீடை, லட்டு, பூந்தி, வடை, இனிப்பு போலி, சோமாஸ், குலோப்ஜாம், கேசரி, பணியாரம், பானி பூரி, சுண்டல் ஆகியவற்றை மற்ற மாணவர்களுக்கு விற்று அதில் உள்ள இலாபத்தைப் பள்ளி முதல்வரிடம் வழங்கினார்கள்.

 

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில்... “எங்கள் வீட்டில் தயாரித்த பொருட்களை மற்ற மாணவர்களுக்குக் கொடுத்து அதில் வரும் லாபத்தை ஆதரவற்றோருக்கு வழங்குவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றனர்.

 

பள்ளியில் நடைபெற்று வரும் உணவுப் பொருட்கள் விற்பனை திருவிழா குறித்து பள்ளி முதல்வர் திலகம் கூறுகையில், “ஒரு சிறந்த மாணவ மாணவியரை உருவாக்குவதில் எங்கள் பள்ளி எப்போது முதலிடம் வகிக்கும். குறிப்பாகப்  பிறருக்கு உதவும் மனப்பான்மை, விற்பனையை மேம்படுத்துதல், பொருளை விற்று அதில் வரும் லாபத்தை எவ்வாறு கணக்கீடு செய்வது அதைப் பிறருக்கு எந்த வழியில் உதவுவது என்பதை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறோம். இதற்குப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் ஆதரவு அளித்து வருவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளி மாணவர்கள் தாங்கள் தயாரித்த உணவுப் பொருட்களை சக மாணவர்கள் முதற்கொண்டு ஆசிரியர் வரை அவர்களிடம் விற்பனை செய்து அதில் வரும் லாபத்தை ஆதரவற்றோருக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கி வருவது எங்கள் பள்ளி மாணவர்களின் மனித நேயத்தைக் காட்டுவதாக இருக்கிறது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.