மிக உயர்ந்த இடத்திற்கு போனாலும் பிறந்த மண்ணுக்கும் மக்களுக்கும் பெருமையுடன் சேவையாற்ற சில நல்ல உள்ளங்களால் தான் முடியும். அந்த வரிசையில் தான் இந்த தொழிலதிபர் குடும்பமும் வருகிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் தினசரி 300 க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், உள் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்கள் என அனைவருக்கும் காலையும் மாலையும் இலவச உணவு வழங்குவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு வரும் உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளியுடன் உடன் வந்து காத்திருப்பவர்களுக்கு என தனியாக ரூபாய் 22 லட்சம் ரூபாய் செலவில் ஒரு புதிய கட்டடம் ஒன்றையும் கட்டிக் கொடுத்துள்ளார்கள்.
![government hospital](http://image.nakkheeran.in/cdn/farfuture/mwYj_moznlHzVxt1XrKEhVnhzjQ9HuLkF8qw5sncIu8/1584443111/sites/default/files/inline-images/sa321.jpg)
அவர்கள் வேறு யாருமல்ல மசாலா பொருள் தயாரிப்பில் முதன்மையான நிறுவனமான ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் தான்.
இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதனை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் திறந்துவைத்தார். இந்த விழாவில் சக்தி மசாலா நிறுவனர் சாந்தி துரைசாமி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பெருந்துறை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சாந்தி வரவேற்றார்.
சக்திதேவி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் துரைசாமி பேசுகையில், எங்களது சக்தி மசாலா சார்பில் இங்கு வரும் உள்நோயாளிகள் புறநோயாளிகள் மற்றும் அவருடன் வருவோர் அனைவருக்கும் காலையும் மாலையும் என இருவேளை உணவு எங்கள் ஆயுள் காலம் முழுவதும் இலவசமாக வழங்குவோம் என அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம் பேசும்போது, இந்த பெருந்துறை பகுதிக்கு சக்தி மசாலா நிறுவனம் பல கோடி ரூபாய்களுக்கு தன் சொந்த செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து உதவியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், இது அவர்கள் பிறந்த பூமி. பெருந்துறையில் பிறந்து இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் இந்த சக்தி மசாலா நிறுவனம் தனது நன்றிகடன் வெளிப்பாடாக பெருந்துறைக்கு ஏராளமான நிதி உதவி செய்துள்ளார்கள் என பாராட்டினார்.
தொழிலதிபர்கள் வரிசையில் சக்தி மசாலா குழுமம் ஒரு முன்னணி நிறுவனமாக இருந்தாலும், தொழில் செய்கிறோம், பணம், பொருள் சம்பாதித்தோம் வாழ்கிறோம் என்று குறுகிய வட்டத்தில் வாழும் தொழிலதிபர்கள் அல்ல இவர்கள், பல சமூக செயல்பாடுகள் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதிலும் அவர்களுக்கு இலவச கல்வி, சுகாதாரம், மருத்துவம் என அன்போடு தொண்டாற்றி வருகிறார்கள் சேவை மனப்பான்மையில் பாராட்டப் பட வேண்டிய நிறுவனம் என்பதை தொடர்ந்து நிருபித்து வருகிறது.