Skip to main content

டேங்கர் லாரி பெயர் மாற்ற 5,500 ரூபாய் லஞ்சம்; ஆர்.டி.ஓ, புரோக்கர் கைது

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

bn

 

கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கேப்பர் மலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக சுதாகர் என்பவர் செயல்பட்டு வந்தார். இவர் மீது பல்வேறு லஞ்ச புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. எந்த ஒரு பணிக்காகவும் இவர் லஞ்சம் பெறுவதாகவும் இந்த லஞ்சப்பணம் புரோக்கர்கள் மூலம் சென்னையில் ஒரு புரோக்கரிடம் கொடுத்து அதன் பிறகு சென்னையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுதாகரின் இல்லத்திற்கு இந்த பணம் செல்வதை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வந்தனர்.

 

இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஒருவர் கடலூரை சேர்ந்தவரிடமிருந்து கழிவு நீர் டேங்கர் லாரி வாங்கியுள்ளார். இந்த வாகனத்தை புதுப்பிப்பதற்காக கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை செல்வராஜ் என்பவர் மூலம் அணுகியுள்ளார். செல்வராஜ் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து வட்டார போக்குவரத்து அலுவலரை சந்தித்தபோது அவர் அங்கு வந்த சிவா என்ற புரோக்கரை சந்திக்க கூறியுள்ளார். சிவா என்ற புரோக்கரை சந்தித்தபோது அவர் 5000 ரூபாய் ஆர்.ட்டி.ஓவிற்கு, தனக்கு 500 ரூபாய் என மொத்தம் 5,500 ரூபாய் தர வேண்டுமென கேட்டுள்ளார்.

 

இதனை கொடுக்க மனம் இல்லாத செல்வராஜ் தனது வாகனத்திற்கு அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ள நிலையில் தான் இதற்கான பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என கருதி கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதனிடம் புகார் தெரிவித்தார். தேவநாதனின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய 5,500 ரூபாய் பணத்தினை புரோக்கர் சிவாவிடம் இன்று கொடுப்பதற்காக செல்வராஜ் சென்றார். அப்பொழுது லஞ்ச ஒழிப்பு போலீசாரும் உடன் சென்ற நிலையில் செல்வராஜ் புரோக்கர் சிவாவிடம் அந்த பணம் கொடுத்து, அவர் ஆர்.டி.ஓவிடம் கொடுக்கும் பொழுது பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக இருவரையும் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ அறையில் சோதனை மேற்கொண்ட போது 2.5 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதனை தொடர்ந்து சென்னையில் பணம் கைமாற்றம் செய்யும் புரோக்கரையும் அங்குள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்த நிலையில் சென்னையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுதாகரின் வீடு மற்றும் கடலூரில் உள்ள அவரது வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.  வட்டாரப் போக்குவரத்து அலுவலர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்;நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
womanincident What happened Police explanation

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமாணியம் கிராமத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக ஒரு பெண் வெளியில் கூறியதாகவும், இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த சிலர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த பெண்ணை பலமாக தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் கூறப்பட்டது. இது குறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது. கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC)  அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

woman incident What happened Police explanation

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், சமூகவலைத்தளங்களில் பரவிய ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.