
கடலூர் மாவட்டம் சேடப்பாளையம் என்ற ஊரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் இளையராஜா. இவருடைய அலுவலகத்திற்கு பட்டா பெயர் மாறுதல் கேட்டு திருமணமான இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். அந்த இளம்பெண் பட்டா வாங்க வந்தபோது இளையராஜாவிற்கும் அப்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் முகநூல் மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் பல நேரங்களில் அரைகுறை ஆடையுடன் இளம்பெண்ணை இளையராஜா ஆபாசமாகப் படம் எடுத்துள்ளார். அந்த படத்தைக் காட்டி தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என இளையராஜா இளம்பெண்ணை மிரட்டி உள்ளார்.
ஆனால் இளம்பெண் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் மகாபலிபுரத்தில் உள்ள விடுதிக்கு அவரை மிரட்டி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, அங்கு பலமுறை அப்பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். அதேசமயம் இளம்பெண்ணைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிய நிலையில், அவர் மகாபலிபுரம் விடுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையில் புகார் அளித்து இளம்பெண்ணை மீட்டு வந்தனர். அந்த இளம்பெண் தன்னை இளையராஜா பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை தேடி வருகின்றனர்.
பட்டா மாறுதல் செய்ய வந்த இளம்பெண்ணைக் கிராம நிர்வாக அலுவலர் மிரட்டி வன்கொடுமை செய்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.