Skip to main content

சென்னை வந்த ஆர்.கே.சுரேஷ்; விமான நிலையத்தில் சுற்றி வளைத்த அதிகாரிகள்

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
RK Suresh who returned to Chennai was interrogated by the resident authorities

சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், அந்நிறுவனம் முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திரும்பச் செலுத்தவில்லை.

இதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் அளித்த புகார் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், நாகராஜ், அய்யப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி, ராஜா உள்ளிட்ட 11 பேர் பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் பாஜகவின் ஓபிசி பிரிவு மாநிலத் துணைத் தலைவராக இருந்து வரும் ஆர்.கே. சுரேஷ், ஆருத்ரா மோசடி வழக்கில் தனக்குத் தெரிந்தவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களுக்கு உதவியும் வந்ததாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஆர்.கே. சுரேஷ் வங்கிக் கணக்கிற்குப் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆர்.கே. சுரேஷ் ஆஜர் ஆகவில்லை.

அதே சமயத்தில் ஆர்.கே. சுரேஷ் தரப்பில், சம்மனை ரத்து செய்ய உத்தரவிட வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து மோசடி புகாரில் தலைமறைவாக இருந்து வரும் நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகளை முடக்கி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, ஆர்.கே.சுரேஷ் தான் சென்னைக்கு வந்து விசாரணைக்கு ஆஜராகும் வரை தன்னை கைது செய்ய கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், டிசம்பர் 12 ஆம் தேதி ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், அதுவரை அவரை கைது செய்ய கூடாது என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் இன்று காலை துபாயில் தலைமறைவாக இருந்த ஆர்.கே.சுரேஷ் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்ததால் குடியுரிமை அதிகாரிகள் விமான நிலையத்தில் ஆர்.கே சுரேஷை பிடித்து விசாரணை செய்தனர். பின்பு இந்த வழக்கின் விசாரணைக்குதான் நான் வந்திருக்கிறேன் என்று ஆர்,கே.சுரேஷ் கூறியதால் அவரை குடியுரிமை போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஆஜராவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.