![Medical associations that trained city traffic police](http://image.nakkheeran.in/cdn/farfuture/oF9oSGtqJeKpXt4DtMP5eQM7lD9cPMvsW7D7PwDzEjM/1628483917/sites/default/files/inline-images/traffic-police.jpg)
திருச்சி மாநகரக் காவல்துறை மற்றும் திருச்சி எலும்பு மூட்டு மருத்துவ சங்கம் சார்பில், திருச்சி மாநகரப் போக்குவரத்து பணியில் ஈடுபடும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவலர்கள் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்களுக்கான விபத்து கால முதலுதவி பற்றிய ஒருநாள் பயிற்சி நேற்று (08.08.2021) இந்திய மருத்துவ சங்கம் (IMA) ஹாலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையரின் வழிகாட்டுதலின்படி விபத்து காலத்தில் விபத்திற்குள்ளானவர்களுக்கு அவர்களின் காயங்களின் தன்மையைக் கண்டறிந்து, அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய முதலுதவி பற்றியும், அவசரகால ஊர்தி வரும்வரை விபத்திற்குள்ளானவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டியவற்றைப் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் முதலுதவி பற்றி திருச்சி எலும்பு மூட்டு மருத்துவர் சங்கத் தலைவர் மருத்துவர் ஜெய்கிரிஷ், செயலர் மருத்துவர் முகேஷ், மோகன், பொருளாளர் மருத்துவர் ரமேஷ் பிரபு, மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் மாநகரப் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டனர்.
இப்பயிற்சியின் மூலம் சாலை விபத்தில் First Respondent ஆகிய தங்களால் விபத்துக்குள்ளானவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய முதலுதவிகள் பற்றியும், விபத்து ஏற்பட்ட முதல் அரைமணி நேரமான உயிரை காக்கும் பொன்னான நேரங்களில் தாங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதும் பற்றியும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரை 90 சதவீதம் காப்பாற்ற முடியும் என்பதையும் மேற்படி மருத்துவர்கள் விளக்கிக் கூறியது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக இப்பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தார்கள்.