Skip to main content

அரசு உத்தரவுப்படி மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா பணியிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மனு!

Published on 31/07/2020 | Edited on 31/07/2020

 

Request to annamalai Univ Registrar to keep the differently abled people safe from covid

 

அரசு உத்தரவுப்படி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் கரோனா காலத்தில் பணிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்சிராணி, கடலூர் மாவட்ட தலைவர் ராஜா ஆகியோர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவனை சந்தித்து மனு ஒன்று அளித்துள்ளனர். அதில், கரோனா நோய்த்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு அரசு, மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கு அலுவலகப் பணிகளில் இருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனால், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உட்பட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் இவ்விலக்கு மறுக்கப்படுகிறது.

 

இது அரசின் அறிவிப்புக்கு எதிரானது. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு அலுவலகப் பணிகளில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும். மேலும் இதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி செவிலியர் ஜென்மராக்கினி கட்டாயப் பணியின் காரணமாக நோய்த்தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார். இந்த நோய் உள்ளிட்ட பாதிப்புக்களைக் கொண்டுள்ள மேற்படி செவிலியருக்கு சரியான மருத்துவம் கூட வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு உள்ளனர்.

 

மாற்றுத்திறனாளியான ஜென்மராக்கினிக்கு சிறப்பு மருத்துவக் கவனிப்பு அளித்திட வேண்டும். மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனைத்துப் புலங்களிலும் பணியாற்றும் மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என அனைவருக்கும் அரசு அறிவிப்பின்பேரில் பயணப்படி ரூ.2,500 ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இதனை மாற்றி ஒவ்வொரு மாத ஊதியத்துடன் வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்’ - குடும்பத்தினருடன் பொன்விழாவைக் கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1970 முதல் 1974 ஆம் ஆண்டில் வேளாண் கல்லூரியில் 45 மாணவர்கள் பயின்றனர். கல்வி பயின்ற பிறகு அவர்கள் மத்திய - மாநில அரசின் பல்வேறு துறைகளில் வங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ‘AU74 அக்ரி பட்டதாரிகள் சங்கம்’ என்ற சங்கத்தை அமைத்து,  அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் கல்வி பயின்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், குடும்பத்தினருடன் இணைந்து 50 ஆம் ஆண்டு பொன்விழாவை (1974 - 2024) பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அக்ரி நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர்களை பாராட்டி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு,  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், வேளாண் புல தலைவர் அங்கயற்கண்ணி மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களைப் பாராட்டி மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள்.

Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

மேலும், அங்கு பயின்ற முன்னாள் வேளாண் மாணவர்கள் வேளாண் கல்லூரிக்கு, சங்கத்தின் சார்பாக ரூ. 3 லட்சம் செலவில் உபகரணங்கள், அறைகள் புதுப்பித்தல் போன்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ‘50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாக உள்ளது’ என்று கூறினார்கள்.