
திருப்பூர், பல்லடம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தோட்டத்து வீடுகளில் தனியாக வசிக்கும் முதிய தம்பதிகள் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் இதில் ரியல் எஸ்டேட் மாஃபியாவுக்கு தொடர்பு இருக்கலாம் என பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''ரியல் எஸ்டேட் கம்பெனிகள் இந்த கொலைகளுக்கு பின் இருக்குமா என்ற ஒரு சந்தேகம் வருகிறது. ஏனென்றால் குறிப்பாக இந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய வயதான பெற்றோர்கள் வசிக்கக்கூடிய இடங்களில் எல்லாம் அவர்களின் குழந்தைகள் வெளிநாட்டில் வசதியாக உள்ள குடும்பங்கள் தான். அவர்களுக்கு தோட்டத்து வீடுகளை உடனடியாக விற்கும் சூழல் கிடையாது.
ஆனால் இந்த பகுதியில் நடந்து கொண்டிருக்கின்ற இந்த பொருளாதார முன்னேற்றத்தின் காரணமாக நிலத்தை அபகரிக்க ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல் இப்படிக் கூட திட்டமிட்டு வேறு விதமாக தாக்குதல் நடத்துவார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது. இந்த சந்தேகத்தை கூட காவல்துறை அந்த கோணத்தில் விசாரிக்க வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழல் வந்தால் பெற்றோர்களை உடனடியாக நகரத்திற்கு கொண்டு வந்து குடிவைத்துவிட்டு அந்த பூமியை விற்க ஆரம்பிப்பார்கள். அதனால் ரியல் எஸ்டேட் மாஃபியா இதற்குப் பின் இருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறை விசாரிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.