Skip to main content

திருவோடு ஏந்தி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

Published on 03/03/2025 | Edited on 03/03/2025
Rameswaram fishermen struggle carrying the begging

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மீனவர்களின் விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்வதால், மீனவர்களின் வாழ்வாதாரதமும் பாதிப்படைந்து வருகிறது. மீனவர்களை விடுவிக்கக் கோரி இலங்கை அரசுக்கு, மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலில் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறார். ஆனாலும், இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை தொடர்ந்து கொண்டே வருகிறது.

இந்த சூழ்நிலையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள்  கடந்த 22 ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் அதிகாலை 2 மணியளவில் தனுஷ்கோடிக்கும், வடக்கு மன்னார் கடற்பரப்புக்கும் இடையே கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் 32 பேரை கைது செய்தனர்.

Rameswaram fishermen struggle carrying the begging

மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதற்கு மீனவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மீனவர்கள் கைதுக்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நான்காவது நாளாக இன்றும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியில் திருவோடு ஏந்தி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடி உரிமையை பெற்றுத் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. நாளை தீக்குளிப்பு போராட்டம்  நடத்த இருப்பதாகவும் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்