Skip to main content

7 தமிழர் விடுதலையில் மத்திய அரசு மோசடி: ராமதாஸ் கண்டனம்

Published on 28/11/2018 | Edited on 28/11/2018
Ramadoss



பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்த விவகாரத்தில், உரிய விதிகள் வகுக்கப்படாத நிலையில், இல்லாத விதிகளைக் காரணம் காட்டி அவர்களின் விடுதலைக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வந்தது அம்பலமாகியிருக்கிறது. எந்த அடிப்படையுமே இல்லாமல் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எழுவர் விடுதலையை மத்திய அரசு தாமதப்படுத்தியது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, 
 

ராஜிவ் கொலை வழக்கில் வாழ்நாள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.


இந்த வழக்கை விசாரித்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், குற்றவழக்குகளில் தண்டனைக் குறைப்பு செய்யும் அதிகாரம் எந்த அரசுக்கு உள்ளது என்பது குறித்து 7 வினாக்களை எழுப்பி அதுபற்றி முடிவெடுக்கும்படி அரசியல் சாசன அமர்வைக் கேட்டுக்கொண்டார்.


அவரது  ஓய்வுக்குப் பிறகு 7 பேர் விடுதலை குறித்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், யாருக்கு அதிகாரம் என்பது குறித்த வழக்கை  தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு விசாரித்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான பிரிவுகளின்படி தண்டனைக் குறைப்பு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம்  மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என்று அரசியல் சாசன அமர்வு 02.12.2015 அன்று தீர்ப்பளித்தது.

 

அதைத் தொடர்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான பிரிவுகளின்படியும், அரசியலமைப்புச் சட்டத்தின் 73 மற்றும் 73 ஆவது பிரிவின்படியும் தண்டனைக் குறைப்பு செய்வதற்காக மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின் நகல்களை வழங்கக்கோரி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பேரறிவாளன் விண்ணப்பித்து இருந்தார்.
 

அந்த விண்ணப்பம்  கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் தான் 7 பேர் விடுதலை பற்றி முடிவெடுக்கும்படி நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு 23.01.2018 அன்று மத்திய அரசுக்கு ஆணையிட்டிருந்தது.

 

ஆனால், 7 தமிழர்களை விடுதலை செய்ய அனுமதிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறிவிட்டது. அதுமட்டுமின்றி, 7 தமிழர் விடுதலைக்கு குடியரசுத் தலைவர் அனுமதி மறுத்து விட்டதாகவும் செய்திகள் பரப்பப்பட்டன. அதன்தொடர்ச்சியாகத் தான் அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின் 7 தமிழர்களை மாநில அரசே விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


அதன்படி  7 தமிழர்கள் விடுதலை குறித்து தமிழக ஆளுனருக்கு மாநில அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. அமைச்சரவையின் பரிந்துரை கடந்த 81 நாட்களாக ஆளுனர் புரோகித்தின் பரிசீலனையில் உள்ளது.
 

இத்தகைய சூழலில் தான் 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு நடத்திய மோசடியான நாடகங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. 08.01.2016 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பேரறிவாளன் வினவிய வினாக்களுக்கு மத்திய உள்துறை இப்போது அளித்துள்ள பதில்கள் தான்  நாடகங்களை அம்பலப்படுத்தியுள்ளன.
 

மத்திய உள்துறை அளித்துள்ள பதிலில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432-435 பிரிவுகளின் கீழ் தண்டனைக் குறைப்பு செய்வது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த விதிகளையும் வகுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
 

7 தமிழர்களின் தண்டனைக் குறைப்பு  குறித்த பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்றால், அதை சில சட்டங்கள் அல்லது விதிகளின்படி தான் செய்ய முடியும். ஆனால், தண்டனைக் குறைப்பு குறித்த விதிகள் வகுக்கப்படாத நிலையில், மத்திய அரசு எவ்வாறு தண்டனைக் குறைப்பு குறித்த பரிந்துரையை நிராகரிக்க முடியும்?

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை ஆகி விடக் கூடாது என்ற எண்ணத்தில் தான், விதிகளே இல்லாத சூழலில் தங்கள் விருப்பப்படி அது குறித்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. அதன் மூலம் 7 தமிழர்கள் விடுதலையை மத்திய அரசு இரு ஆண்டுகள் தாமதப் படுத்தியுள்ளது.  
 

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மன்னிக்க முடியாத மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமின்றி, இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலும் ஆகும். 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் எழுவரை விடுதலை செய்ய அற்புதமான வாய்ப்பு கிடைத்த நிலையில், மத்திய அரசு சொந்த வெறுப்பு காரணமாக அவர்களின் விடுதலைக்கு எதிராக முடிவெடுத்து சதி செய்திருக்கிறது. இதனால் 7 தமிழர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இழப்புகளை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும்.
 

 

இது ஒருபுறமிருக்க 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்து  இன்றுடன் 81 நாட்கள் ஆகும் நிலையில் அதன் மீது முடிவெடுக்காமல் ஆளுனர் தாமதம் செய்வதும்  மனித உரிமை மீறலாகும். 7 தமிழர்கள் விடுதலையை தாமதம் செய்ய எந்த நியாயமான காரணங்களும் இல்லை. எனவே, இனியும் தாமதிக்காமல் 7 தமிழரையும் விடுவித்து ஆளுனர் ஆணையிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.