புதுக்கோட்டை மாவட்டத்தில் மரங்கள் வளர்ப்பில் விவசாயிகள், இளைஞர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். கஜா புயலில் கோடிக்கணக்கான மரங்களை பறிகொடுத்த மக்கள் அதைவிட பல மடங்கு மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை காக்க போராடி வருகின்றனர். அதனால் எந்த ஒரு நிகழ்வானாலும் மரக்கன்றுகளை வழங்குவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் பிறந்த நாள், திருமண நாள், தலைவர்கள் பிறந்த நாள், நினைவு தினங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கிறார்கள்.

இந்தநிலையில் அறந்தாங்கி அருகே உள்ள அலஞ்சிரங்காடு கிராமத்தில் அமைந்துள்ள குருகுலம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கிராமங்களில் நடப்படும் மரக்கன்றுகளை வளர்க்க கசிவு நீர் பாசனத்திற்காக மண் பானைகள் வழங்கப்பட்டது. பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இது குறித்து கூறுகையில், தீபாவளி என்றால் பட்டாசு சத்தம் என்பதனை மாற்றி புதிய சிந்தனையில் இப்பள்ளியில் பயிலும் சுமார் 500 மாணவ-மாணவிகளுக்கு செம்மரக்கன்றுகளை வழங்கி இந்த தீபாவளியை கொண்டாடுகிறோம் என்றனர்.
பள்ளி நிர்வாகி குருகுலம் சிவநேசன் இதுகுறித்து கூறும் போது, குழந்தைகள் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரிப்பு சம்பந்தமாக புகைப்படங்களை எடுத்து நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும் என்றும் ஒரு செம்மரம் இன்னும் இருபது ஆண்டுகாலம் கழித்து பல லட்சங்களுக்கு விற்க முடியும். அதன் மூலம் குழந்தைகளுக்கு மேற்படிப்புக்கு அல்லது திருமணம் நிகழ்விற்கு உதவியாக இருக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் மரம் தங்க கண்ணன், கொத்தமங்கலம் பிரபாகரன் மற்றும் பனை மர காதலர்கள் குழுவினை சேர்ந்த இளைஞர்கள் மரக்கன்றுகளை குழந்தைகளுக்கு வழங்கினார்கள். பள்ளியின் தாளாளர் சிவனேசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் வினோத் ஆகியோர் இதற்கான விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர்.