Skip to main content

மாணவிகளை தவறாக படம் எடுத்த காமுகன்... கண்டுகொள்ளாத கல்லூரி நிர்வாகம்... போராட்டம் நடத்த தயாராகும் மாணவிகள்!

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

கழிவறை இல்லாத அரசுக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இயற்கை உபாதைக்கு ஒதுங்குவதை படம் எடுக்க முயன்ற காமுகனை மாணவிகளே பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் ஏனோ புகார் கொடுக்க மறுத்து வருகிறது. அதனால் மாணவிகளை இணைத்து இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்தவும் தயாராகிவிட்டனர்.

 

pudukottai college student planing to protest

 

புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ளது அரசு மகளிர் கலைக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் சுமார் 3 ஆயிரம் மாணவிகள் படிக்கிறார்கள். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என மாணவிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் அதைப் பயன்படுத்த முடியாமல் மாணவிகள் தவித்து வருகின்றனர்.  வேறு வழியின்றி கல்லூரி வளாத்தில் உள்ள மரத்தடியை திறந்தவெளியை கழிப்பறையாக மாணவிகள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று கல்லூரி சுற்றுச்சுவரில் மறைந்து நின்று ஒரு காமுகன் மாணவிகள் ஒதுங்கியதை தனது செல்போனில் படமெடுத்துள்ளான். இதைப்பார்த்த மாணவிகள் அதிர்ச்சியில் அலறி சத்தம் போட்டுள்ளனர். மேலும், அந்த காமுகனைப் பிடித்து புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அதே நேரத்தில், கல்லூரி நிர்வாகம் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் கூறும்போது, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை முற்றிலுமாக சேதமடைந்து பல மாதங்கள் ஆகிறது.  மேலும், மாணவிகள் பயன்படுத்திய நாப்கின்களை எரியூட்டும் எந்திரமும் பழுதாகி பல மாதங்கள் ஆகின்றன. இதனால், மாணவிகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்துள்ளோம். ஆனால், இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இது குறித்து 3 நாட்களுக்கு முன்பு நக்கீரன் இணையத்தில் செய்தியும் வெளியானது.

இதனைத் தொடர்ந்துதான் மாணவிகளுக்கு இத்தகைய அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் காவல்துறையில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகை கீழ்த்தரமான சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அந்த காமுகனை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும். உடனடியாக மாணவிகள் பயன்படுத்துவதற்கு புதிய கழிப்பறையைக் கட்டித்தர வேண்டும். நாப்கின் எரியூட்டும் எந்திரத்தை உடனடியாக பழுதுநீக்கி மாணவிகள் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்