Skip to main content

சேறும் சகதியுமான மயான சாலை... நடவடிக்கைக்கு உத்தரவிட்ட ஆட்சியர்!

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சியில் உள்ள ஆலடிக்கொல்லை பகுதியில் வசிக்கும் மக்களுக்கான மயானம் மேக்கா குளத்தின் அருகில் உள்ளது. பல வருடங்களாக அந்த மயானத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

 

ஆனால் மயானத்திற்குச் செல்ல சாலை வசதி இல்லாததால், யார் இறந்தாலும் ஒவ்வொரு முறையும் மிகவும் சிரமப்பட்டு சடலத்தை தூக்கிச் சென்று தகனம் செய்து வருகின்றனர். சடத்தை தகனம் செய்ய பயன்படுத்தப்படும் விறகுக் கட்டைகளையும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தலையில் சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இன்று அந்தப் பகுதியில் சின்னப்பொண்ணு என்ற மூதாட்டி இறந்த நிலையில், அவரது உடலை மயானத்திற்கு உறவினர்கள் சேற்றில் மிகவும் சிரமப்பட்டு தூக்கிச் சென்றனர். மேலும், மூதாட்டியின் உடலை தகனம் செய்ய விறகுக்கட்டைகள் ஏற்றப்பட்ட சரக்கு ஆட்டோ செல்ல முடியாமல் சகதியில் சிக்கித் திணறியதால், பாதி தூரம் வரை உறவினர்கள் வாகனத்தை கயிறுகட்டி இழுத்துச் சென்றனர். பின்னர் விறகுக் கட்டைகளை தூக்கி, சுமந்து சென்று தகனம் செய்தனர்.

 

இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும் போது, ''ஆலடிக்கொல்லை பகுதியில் வசிப்பவர்கள் இறந்தால், மயானத்திற்குக் கொண்டுசெல்ல சாலை வசதி இல்லை. சாலை வசதி வேண்டும் என்று கீரமங்கலம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. கோடைக்காலங்களில் சடலங்களைத் தூக்கிச் சென்றுவிடலாம். ஆனால், இப்போது போல மழைக்காலங்களில் சேறும் சகதியுமான நடக்கமுடியாத மண் சாலையில் சடலங்களைத் தூக்கிச் செல்கிறோம். இன்று, விறகு வாகனம் கூட போக முடியாமல் கயிறுகட்டி இழுத்துச் சென்றோம். இதில், வழுக்கி விழுந்து சிலர் காயமடைந்துள்ளனர். மேலும், மதுபாட்டில்களை  வழியில் உடைத்துப் போடுவதால், மண்ணோடு புதைந்து கிடந்து காலில் குத்திவிடுகிறது. உடனடியாக மயானச் சாலையை சீரமைக்கவில்லை என்றால் இனிமேல் சடலங்களை மயானத்திற்கு கொண்டு செல்லாமல் சாலையிலேயே வைத்திருப்போம். விரைவில் வர உள்ள சட்டமன்றத் தேர்தலையும் புறக்கணிப்போம்'' என்றனர்.

 

சடலத்தை மயானத்திற்குக் கொண்டுசெல்ல சாலை வசதி இல்லாமல் அவதிப்படும் தகவல், மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவனத்திற்குச் சென்ற நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கீரமங்கலம் சரக வருவாய் ஆய்வாளர் முருகேசன், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கீரமங்கலம் போலீசாரும் மயானத்திற்குச் செல்ல வழியில்லாமல் தவித்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், விரைவில் மயானத்திற்கான சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

முதல் கூட்டத்திலேயே முட்டிக் கொண்ட தி.மு.க. - காங்கிரஸ்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
DMK Congress which was knocked out in the first meeting

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுயில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக புதுக்கோட்டை மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராமநாதபுரம் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியா கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் கே.நாவஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கூட்டத்தில் பேச வந்த அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் பேசும், “இப்போது நாங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால், அறந்தாங்கி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் செய்து தர வேண்டும் இல்லை என்றால் தற்கொலை முயற்சியோடு அறிவாலயம் நோக்கி போவோம்” என்று பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து பேச வந்த காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் பேசும் போது, “அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் இன்றைய போஸ்டரில் அவர் படம் இல்லை இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. படத்தையும் போட வேண்டும்” என்றார். மேலும் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசும்போது, “நேற்று வேட்பாளர் அறிவிப்பு இன்று விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு. திராவிடர் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அது ஒருபோதும் நடக்காது. பாசிக பா.ஜ.க. தான் நம்ம எதிரி அவர்களை வீழ்த்துவோம். அமைச்சர் மெய்யநாதன், “கடந்த முறை பெற்றுத் தந்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுத் தருவோம்” என்றார்.

DMK Congress which was knocked out in the first meeting

தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, “முதல் கூட்டத்திலேயே சொல்கிறோம் சந்தோசமாக செல்லுங்கள், அறந்தாங்கி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம். ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று தான் சொன்னோம்” என்றார். மேலும் உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, “இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள் அடுத்த முறை (2026) தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம். அதே போல இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. படம் அச்சடிக்கப்படும்” என்று காங்கிரஸ் சுப்புராமுக்கும் பதில் கூறுவது போல பேசினார். இறுதியாக பேசிய வேட்பாளர் நவாஸ்கனி, “அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

அறந்தாங்கி தொகுதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டதும், 2026 சட்மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடியவில்லை என்றால் அறிவாலயத்தில் தற்கொலை முயற்சி செய்வோம் என்று பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.