மாணவர்கள் நலன் கருதி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சிவகங்கையில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயற்குழுவில், "5 மற்றும் 8- ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. உலகில் எந்த நாட்டிலும் 5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்பது நடைமுறையில் இல்லை. இத்தேர்வு அறிவிப்பின் மூலம் சின்னஞ்சிறு மாணவர்கள் மத்தியில் தேர்வு பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராப்புற ஏழை, எளிய மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். இடைநிற்றல் அதிகரிக்கும்.

இதனால் மாநிலத்தின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படும். எனவேதான் கல்வியாளர்களும், உளவியல் நிபுணர்களும் இதற்கு கடுமையான எதிர்ப்பைப் தெரிவித்து வருகின்றனர். ஐந்தாம் வகுப்பு வரை தேர்ச்சி என்பது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்திலும், எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி என்பது புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி கொண்டு வரப்பட்ட திட்டமாகும். எனவே தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்னும் திட்டத்தை மாணவர்கள் நலன் கருதி உடனடியாக கைவிட வேண்டும்." என மாணவர்கள் நலன் கருதி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானத்தை நிறைவேற்றியது.

மேலும், "அரசாணை எரிப்புப் போராட்டம் மற்றும் ஜாக்டோ ஜியோ போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர்கள், 17- ஆ குற்ற குறிப்பாணை பெற்றவர்கள், பணியிட மாறுதல் பெற்றவர்கள் மீது நிலுவையில் உள்ள அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், பெண் ஆசிரியர் ஒருங்கிணைப்பு குழுவினை வலுப்படுத்தி எதிர் வரும் மார்ச் மாதம் மகளிர் தின கருத்தரங்கம் நடத்துவது, அவசர காலங்களில் சட்ட ரீதியான விடுமுறைக்கு அனுமதி கோரும் ஆசிரியர்களுக்கு விடுமுறை அனுமதியை கருத்தாய்வு மைய தலைமையாசிரியர்கள் மறுப்பதோடு அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொள்வதை தவிர்க்க வேண்டும்" என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் துணைத்தலைவர் மாலா தலைமையில் நடைப்பெற்ற இச்செயற்குழுக் கூட்டத்தில் மாநிலத் துணைத்தலைவர் ஜோசப் ரோஸ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகிக்க, மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசியது குறிப்பிடத்தக்கது.