Skip to main content

அரசு மருத்துவமனை எதிரே நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு! 

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

Postponement of the demonstration that was going to take place in front of the government hospital!

 

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பல்வேறு குறைபாடுகளை கண்டித்தும் அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு பகுதி குழு சார்பில் 7.10.2022 இன்று மருத்துவமனை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டம் தற்போது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

திருச்சி அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இளநிலை நிர்வாக அலுவலர், அலுவலக கண்காணிப்பாளர், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்கள் நிலை ஒன்று, சுருக்கெழுத்து தட்டச்சர்கள் நிலை இரண்டு, எழுத்தர், பதிவறை எழுத்தர், உதவியாளர், அலுவலக உதவியாளர், புள்ளியல் உதவியாளர் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். படுக்கைகள் பற்றாக்குறை, மருத்துவமனை வளாகத்தில் காணப்படும் சுகாதார சீர்கேடு, கழிப்பறைகள் சரிவர பராமரிக்கப்படாத அவலம், மேலும் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனம் மற்றும் தொலைபேசி திருட்டு அதிகரித்து உள்ளது. சில குறிப்பிட்ட நோய்களுக்கான மருந்துகள் பற்றாக்குறை, அதோடு நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமற்று காணப்படுவது போன்ற மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மற்றும் மருத்துவமனை நிர்வாகமும் தலையிட்டு உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படவிருந்தது. 

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு பகுதி குழு சார்பில் இன்று மருத்துவமனை எதிரே இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில், 6ம் தேதி நேற்று அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் டீன் நேரு தலைமையில், மெடிக்கல் சூப்பிரண்ட் அருண்ராஜ் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.சிவா, ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் க. சுரேஷ், தலைவர் நடராஜா, மேற்கு பகுதி செயலாளர் இரா.சுரேஷ் முத்துசாமி, மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இந்த பேச்சுவார்த்தையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் உறுதி அளிக்கப்பட்டது. இதை அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி குழு சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.