Skip to main content

மொத்தமாக சுருட்டிய கொள்ளையர்கள்; 4 மணி நேரத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

police found the missing hand in Trichy in 4 hours

 

திருச்சி மாவட்டம் மலைக்கோட்டைக்கு அருகே உள்ள சந்துக்கடை சௌந்தரபாண்டியன் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவர் சொந்தமாக தங்க ஆபரணங்கள் செய்யும் நகைப்பட்டறை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் வரும் வருமானத்தை வைத்து தனது மனைவி குழந்தைகளுடன் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். 

 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இ.பி ரோடு பகுதியில் உள்ள வேதாந்திரி நகரில் தான் புதிதாகக் கட்டியுள்ள வீட்டிற்கு தனது குடும்பத்துடன் குடியேறியுள்ளார். அதன்பிறகு, அடுத்த நாள் காலை ஜோசப் வழக்கம்போல் தனது நகைப்பட்டறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கடையின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜோசப், மிகுந்த பதற்றத்துடன் உள்ளே நுழைந்துள்ளார். 

 

அப்போது, அந்த கடைக்குள் இருந்த 950 கிராம் தங்கம், கால் கிலோ வெள்ளி மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் ஜோசப், சில நிமிடங்கள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போயுள்ளார். அதன்பிறகு, உடனடியாக கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதி முழுவதும் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அதுமட்டுமின்றி, காவல்துறை ஆணையர் அன்பு மற்றும் காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி ஆகியோர் தலைமையில் விரைவாக தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்துள்ளனர். 

 

இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட ரகசிய விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கருவாட்டுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பரணிகுமார் மற்றும் பாலக்கரையைச் சேர்ந்த சரவணன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட குற்றவாளிகளை மதியம் 12.30 மணிக்குள் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் கொள்ளையடித்த அனைத்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கொள்ளை விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா வெகுவாக பாராட்டியுள்ளார். அதே சமயம், நகைகளை கொள்ளையடித்த குற்றவாளிகளை நான்கே மணி நேரத்தில் விரட்டிப் பிடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.