Skip to main content

"தினமும் 200 கேஸ் போடணும்...?" - களமிறங்கிய காவல்துறை... கவலையில் வாகன ஓட்டிகள்!

Published on 25/12/2020 | Edited on 25/12/2020

 

police case

 

கரோனாவிலிருந்து தற்போதுதான் மக்கள் தங்களுடைய இயல்புநிலைக்கு மாறி வருகின்றனர். கரோனா பாதிப்பு தமிழகத்தில் தீவிரமாக இருந்த நேரத்தில், பலர் வேலைவாய்ப்பை இழந்து தவித்தனர். இதனால், மக்களின் வாழ்வாதாரமே பெரிய கேள்விக் குறியாகி இருந்தது. கடந்த மார்ச்சிலிருந்து அக்டோபா் வரை முழுமையான பாதிப்பைச் சந்தித்த மக்கள், அடுத்த இரண்டு மாதங்களில் சில தளர்வுகளைப் பெற்றுள்ளனர். ஆனால், மீண்டும் கரோனாவின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாகத் தற்பொழுது வரும் தகவல் பலருக்கும் பதற்றத்தைக் கிளப்பிவிட்டுள்ளது.

 

இதற்கிடையில் தமிழகக் காவல்துறை கடந்த சில மாதங்களாக எந்தவிதப் பெட்டி கேஸும் போடாமல் இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை வளைத்து வளைத்துப் பிடித்து பெட்டி கேஸ் போட்டு வருகின்றனர். இந்தத் திடீர் அதிரடி நடவடிக்கை எதற்காக என்று விசாரித்தோம் அதில், "தமிழகக் கூடுதல் காவல்துறை தலைவராக உள்ள ராஜேஷ் தாஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லைக்கு வந்தபோது, அவருக்காகச் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அறிந்துகொள்ள நெல்லை வந்தார். அப்போது திருச்சிக்கு வந்த ராஜேஷ் தாஸ், காவல்துறை ஆணையா், ஐ.ஜி., டி.ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகளின் அலுவலகங்களில் ஆய்வு நடத்தினார். பின்னர், ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் செய்தார். அதன்பின், 'தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில் தினமும் சுமார் 200 பெட்டி கேஸ் கண்டிப்பாகப் போட வேண்டும்' எனத் திருச்சியில் இருந்தே ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்" எனச் சொல்லப்படுகிறது.

 

இந்த உத்தரவு குறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், இவர் பொறுப்பேற்ற பின்பு காவல்துறை தலைவர் திரிபாதியின் அதிகாரம் சற்று குறைந்துவிட்டது என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ராஜேஷ் தாஸ் தமிழகம் முழுவதும் பல புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அதில், இந்த பெட்டி கேஸ் போடும் உத்தரவும் ஒன்று. இந்த உத்தரவால் காவல்நிலையங்களில் உள்ள சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள், குற்றம் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வழக்குகளை விசாரணை செய்ய காவல்நிலையங்களில் இருப்பதே இல்லை. காவல்நிலையங்களில் அதிகாரிகளே இல்லாமல் அனைவரும் சாலையில் நின்று இருசக்கர வாகனங்களைப் பிடித்து கேஸ் போடும் பணியைமட்டுமே செய்து வருகின்றனர்.

 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "தற்போதுதான் இயல்புநிலைக்குத் திரும்பிவர ஆரம்பித்துள்ளோம். கையில் வருமானம் இல்லாமல் திணறி வரும் நிலையில், ஹெல்மட் இருந்தால் மாஸ்க் போடவில்லை என்று ஒரு கேஸ், மாஸ்க் இருந்தால் ஹெல்மட் போடவில்லை என்று ஒரு கேஸ் எனப் பதிவு செய்கின்றனர். எங்களில் பலருடைய ஒரு நாள் வருமானமே 300 ரூபாய் தான். அதில், 100 ரூபாயை காவல்துறைக்குக் கொடுத்துவிட்டுப் போவது வேதனையாக உள்ளது. அதிலும், இந்தக் கரோனா காலத்தில் வேலை கிடைப்பதே அரிதான காரியமாகிவிட்டது. கிடைத்த வேலையைச் செய்து கொண்டு தினக்கூலிகளாக வாழும் பலரை இப்படி மடக்கிப் பிடித்து வசூலிப்பது என்பது நியாயமற்ற செயல்" என்று கூறுகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.