Skip to main content

ரூ.1,200 கோடி மோசடி; வெளிநாடு தப்ப முயன்றவரை விமான நிலையத்தில் வைத்து தூக்கிய போலீஸ்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Police arrested a person who tried to escape abroad after defrauding Rs 1,200 crore

 

ஈரோடு மேட்டூர் சாலையில் யுனிக் எக்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவன தலைமையிடம் செயல்பட்டு வந்தது. தமிழகம் முழுவதும் இதன் கிளை நிறுவனங்கள் தொடக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதன் நிர்வாக இயக்குநராக நவீன் குமார் என்பவர் இருந்தார்.

 

இந்நிலையில் இந்நிறுவனத்தில், 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும், ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு மாதம் ரூ.75 ஆயிரம் வீதம் 7 லட்சத்து 50 ஆயிரமும், ரூ.25 லட்சத்திற்கு 5 வருடத்தில் 4 தவணையாக ரூ. 83 லட்சமும் தருவதாக கவர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். குறிப்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டதை நம்பி, ஈரோடு, மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பனியில் உள்ள ராணுவ வீரர்கள் என 1,200 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. 

 

இந்நிலையில், முதலீடு செய்த முதல் இரண்டு மாதத்திற்கு, திட்ட அறிவிப்பின் படி பணத்தை திருப்பி கொடுத்த அந்நிறுவனம், அதன் பிறகு பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதுகுறித்து பணத்தை முதலீடு செய்தவர்கள் கேட்டபோது, உரிய விளக்கம் அளிக்கவில்லை. பின்னர் திடீரென அந்த நிறுவனம் மூடப்பட்டிருந்தது. நிர்வாக இயக்குநர் செல் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு அவர் தலைமறைவானார். இதனால் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த முன்னாள் ராணுவத்தினர், இந்நாள் ராணுவத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு கொடுத்தனர். இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசிற்கு உத்தரவிட்டார். அதன் பெயரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நிர்வாக இயக்குநர் நவீன்குமாரை தேடி வந்தனர். அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

 

இந்நிலையில் நவீன்குமார் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்திருப்பதாக, ஈரோடு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து சென்ற குற்றப்பிரிவு போலீசார், நவீன் குமாரை கைது செய்தனர். பின்னர், அவர் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.