Skip to main content

தொடர் வாகன திருட்டு; சிறுவன் உட்பட 3 பேர் கைது

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

Police arrested 3 people for stealing two-wheelers

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருடு போகும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால்,  பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். 

 

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில், விருத்தாச்சலம் குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், கம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழன்(20), தமிழ் ஆனந்த்(18) மற்றும் 15 வயதுடைய சிறுவன் ஆகிய  மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் மற்றும் கம்மாபுரம் பகுதிகளில் அவர்கள் இருசக்கர வாகனங்களைத் திருடியது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்த 16 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

இதுகுறித்து விருத்தாச்சலம் காவல் துறை வட்டாரத்தில் கூறுகையில், "பொதுமக்கள் அதிகளவில் கூடக் கூடிய விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தனர்.

 

இதனிடையே திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை, கம்மாபுரம் பகுதியில் ஆற்று மணல் கடத்தலில் ஈடுபடும் கடத்தல்காரர்களுக்கு, 3 நபர்களும் குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 3 திருடர்கள் மீதும் வழக்குப் பதிந்த காவல்துறையினர், மூவரில் ஒருவர் சிறுவர் என்பதால் அரசு கூர்நோக்கு இல்லத்திற்குக் கொண்டு சேர்த்தனர். மற்ற இருவரை விருத்தாச்சலம் கிளை சிறையில் அடைத்தனர்.

 

இந்நிலையில், விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் முன்பாக இருசக்கர வாகனத்தை திருடும் சி.சி.டி.வி. வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை நோட்டமிடுவதும், பின்னர் தனது கையில் உள்ள சாவிகளை வைத்து இரு சக்கர வாகனத்தைத் திருடிக் கொண்டு செல்வதும் பதிவாகியுள்ளது. அதேபோல், ஒரே இடத்தில் வெவ்வேறு நாட்களில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட காட்சிகளும் வெளியாகி உள்ளது. திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தியது தெரியவந்ததால், தனிப்படை அமைத்து மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்