Skip to main content

எஸ்.பி.வேலுமணி இடங்களில் அதிரடி ரெய்டு! பின்னணி என்ன..?

Published on 10/08/2021 | Edited on 10/08/2021

 

The path of the case against SB Velumani!

 

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் இன்று ரெய்டு நடைபெற்றது. ஆனால் அவர் மீதான தற்போதைய நடவடிக்கைகளுக்கான தொடக்கப் புள்ளி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வைக்கப்பட்டுவிட்டது. எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கின் பாதை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 

கடந்த 2018- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1- ஆம் தேதி அன்று தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சித் துறையில் ஒப்பந்தங்கள் முறைகேடாக தரப்படுவதாகவும், இதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான் காரணம் எனவும் கூறியிருந்தார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார். 

 

இதைத் தவிர, கடந்த 2018- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23- ஆம் தேதி அன்று எஸ்.பி.வேலுமணி மீது ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி சி.பி.ஐ.யிடமும், லஞ்ச ஒழிப்புத்துறையிடமும் அறப்போர் இயக்கம் மனு அளித்தது. 

 

இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணையைத் தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறையினர், கடந்த 2019- ஆம் ஆண்டு அக்டோபர் 18- ஆம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தனர். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிக்கைத் திருப்தி தரவில்லை என்றும், விசாரணையில் 10 மாதங்களாக முன்னேற்றம் இல்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 

 

இந்த நிலையில் தான் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19- ஆம் தேதியன்று தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர் தாக்கல் செய்த மனுவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லாததால் மேற்கொண்டு நடவடிக்கைகளைக் கைவிட முடிவு செய்துள்ளதாகக் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், வேலுமணி மீதான நடவடிக்கையைக் கைவிட எந்த அடிப்படையில் முடிவெடுத்தீர்கள்? என்று கேள்வி எழுப்பி, அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். 

 

இந்த சூழலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. அரசு அமைந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டது. உள்ளாட்சித்துறையில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை அறிக்கை அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தித் தேவைப்பட்டால் வழக்குப் பதியப்படும் எனவும் கடந்த ஜூலை மாதம் 19- ஆம் தேதி அன்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் மேல் நடவடிக்கைக்கு 8 வாரம் அவகாசமும் கேட்கப்பட்டது. அதேநேரம் கணக்கு தணிக்கைத்துறை அறிக்கை குறித்து விளக்கம் தர எஸ்.பி.வேலுமணி தரப்பும் அவகாசம் கேட்டது. இரு தரப்புக்கும் அவகாசம் அளித்த நீதிமன்றம், புகார்களின் மீது  விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிவுறுத்தியது. 

 

இந்த பின்னணியில் தான் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையும் நடைபெற்றுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.