
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தென்காசி, பாளையங்கோட்ட தொகுதிகளை அதிமுகவிற்கே ஒதுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட கட்சி தொண்டர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
அந்த கடிதத்தில், “நெல்லை மற்றும் பாளையங்கோட்டை சட்டசபை தொகுதிகள் அ.தி.மு.க.வின் கோட்டை ஆகும். இந்த தொகுதிகளில் 2001-ம் ஆண்டு முதல் இன்று வரை அ.தி.மு.க. வீழ்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 25 ஆண்டு காலமாக எம்.எல்.ஏ.வாக 5 முறை போட்டியிட்டு 2 முறை படுதோல்வி அடைந்து அ.தி.மு.க. தொண்டர்களின் உழைப்பில், ஆதரவில் வாக்குகளை பெற்று 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர், கட்சி வளர்ச்சிக்கு தொண்டர்கள், பொதுமக்கள் நலன்களுக்கு, மாவட்ட வளர்ச்சிக்கு எந்தவொரு பணியும் செய்யவில்லை.
எம்.எல்.ஏ. தனது குடும்பம் மற்றும் தனது சாதி, உறவினர்களின், மைத்துனர்களின் நலனுக்காக மட்டுமே உழைத்து வருகிறார். பணத்தை, சொத்தை குவித்து வருகிறார். எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வருவதும் இல்லை. இரட்டை இலை சின்னத்திற்கு, தாமரை சின்னத்திற்கு வாக்களித்த நெல்லை, பாளையங்கோட்டை பொதுமக்கள், அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் தெருவில் நிற்கின்றனர். அ.தி.மு.க. அழிவுப் பாதையில் இருந்து வருகிறது. தொண்டர்கள் மிகமிக மோசமான பாதிப்பில் கஷ்ட நஷ்டத்தில் 25 ஆண்டுகளாக இருந்து வருகிறார்கள்.
ஆகவே, தங்களின் (எடப்பாடி பழனிசாமி) பிறந்த நாளில் நெல்லை மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மிகமிக கவனமாக பரிசீலனை செய்து, நெல்லை, பாளையங்கோட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை 2026 சட்டசபை தேர்தலில் நிறுத்தி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறச் செய்ய ஆவணச் செய்ய வேண்டுகிறோம். 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்றால், இனி வரும் காலங்களில் நெல்லை, பாளையங்கோட்டை தொகுதிகளில் அ.தி.மு.க. கட்சியும், தொண்டர்களும் அழிந்து அ.தி.மு.க. நெல்லையில் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும்”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் நெல்லை தொகுதிகளில் தற்போதைய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க.வில் இருந்தபோதும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுகவில் இருந்து நயினார் நாகேந்திரன் விலகி பாஜகவில் சேர்ந்தர். இருப்பினும் கடந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் அதே நெல்லை தொகுதியில் போட்டியிட்டு தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பது குறிப்பிடத்தக்கது.