Skip to main content

அசல் கடன் 38 லட்சம்... ஆனால் வட்டி, வட்டிக்கு வட்டி 1.40 கோடி ரூபாய் கட்டணுமாம்! நிதி நிறுவன அதிபர் மீது பாய்ந்த கந்துவட்டி வழக்கு!! 

Published on 15/06/2022 | Edited on 15/06/2022

 

Original loan 38 lakhs ... but interest, interest 1.40 crore will pay interest! Kantuvatti case against the financial institution CEO !!

 

மேட்டூர் அருகே, 38 லட்சம் ரூபாய் அசல் கடனுக்கு வட்டி, வட்டிக்கு வட்டி எல்லாம் சேர்த்து 1.40 கோடி ரூபாய் வட்டி செலுத்த வேண்டும் என தாபா உணவக உரிமையாளரை மிரட்டியதாக நிதி நிறுவன அதிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் நேரு நகரைச் சேர்ந்தவர் சதீஸ் (வயது 43). சாம்பள்ளியில் தாபா உணவகம் நடத்தி வருகிறார். இவர், கடந்த 2017- ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அதே பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் ஜெயக்குமார் என்பவரிடம், தொழில் விரிவாக்கத்திற்காக 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். 

 

அதற்கு குறிப்பிட்ட சதவீதம் மாதம்தோறும் வட்டி செலுத்தி வந்துள்ளார். 2019- ஆம் ஆண்டு சதீஸ், முன்பு கடன் பெற்ற அவரிடமே மேலும் 33 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் பெற்றார். இதற்காக 100- க்கு 5 ரூபாய் வட்டி என்று ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். 

 

சதீஸ் பெற்ற கடனுக்கு இதுவரை 50 லட்சம் ரூபாய் வரை வட்டியாக மட்டுமே செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஓராண்டாக வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டதாகவும், அதனால் வட்டித் தொகை செலுத்த முடியவில்லை என்றும் சதீஸ் கூறியுள்ளார். 

 

இதையடுத்து அவரிடம் கடனுக்கான வட்டியையும், வட்டி செலுத்தாத காலத்திற்கு அபராத வட்டியும் கணக்கிட்டு மேலும் 90 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று நிதி நிறுவன அதிபர் ஜெயக்குமார் கேட்டுள்ளார். தன்னால் இப்போதைக்கு அவ்வளவு பெரிய தொகை கொடுக்க முடியாது என சதீஸ் கூறியுள்ளார். அதற்கு ஜெயக்குமார் ஆள்களை வைத்து மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. 

 

இதையடுத்து தாபா உரிமையாளர் சதீஸ், தன்னிடம் ஜெயக்குமார் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக கருமலைக்கூடல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையறிந்த ஜெயக்குமார், திடீரென்று தலைமறைவாகிவிட்டார். 

 

விசாரணையில், சதீஸ், இரண்டு தவணையாக பெற்ற 38 லட்சம் ரூபாய் அசல் கடனுக்கு 50 லட்சம் ரூபாய் வட்டி செலுத்தியுள்ள நிலையில், அவரிடம் மேலும் 90 லட்சம் ரூபாய் வட்டி கேட்டு மிரட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

 

கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.