
விருதுநகரில் இளம்பெண் ஒருவர் 8 பேரால் வீடியோ மிரட்டல் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு மட்டுமே தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பொள்ளாச்சி கொடூரத்தை போல் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கைதான ஹரிஹரன், ஜூனைத் அகமது, பிரவீன் மற்றும் மாடசாமி ஆகிய 4 பேரை, 7 நாட்கள் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
மதுரை மத்திய சிறையில் மேற்கண்ட 4 பேரும் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்தில் வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பள்ளி மாணவர்களும் அடைக்கப்பட்ட நிலையில், அந்தப் பெண்ணிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார், கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினார்கள். கைதானவர்களின் வீடுகளிலும் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ஹரிஹரன், ஜுனைத் அகமது உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்துவதற்காக அவர்களில் சிலரது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தி.மு.க. இளைஞரணியைச் சேர்ந்த ஹரிஹரன், அக்கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட ஜுனைத் அகமது, பிரவீன் மற்றும் மாடசாமி ஆகிய நால்வரும் முழுவதுமாக முகம் மறைக்கப்பட்ட நிலையில் விருதுநகரிலுள்ள குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் 8 பேருக்கு மட்டும் தொடர்புள்ளதா? என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் கைது செய்யப்பட்ட 8 பேருடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் உட்பட 30 பேரிடம் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். தற்போது விசாரணையில் இந்த வழக்கில் 8 பேருக்கு மட்டுமே தொடர்புள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த 8 பேருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது.